இவன் வேட்கைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் ஆண் தேவதை

இவன் வேட்கைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் ஆண் தேவதை
என்றும் இருக்கின்ற வேகம்
இன்று தடையானது
மிதவேகத்திலேயே செல்லவெண்டுமாய்
வேகச்செலுத்திக்கு,,
ஆணையிடுகிறது கால்கள்
திசைமாற்றியில் கரங்கள்
தப்பிதமாய் பதிகிறது சுற்றானங்களில்,,,
எவருமில்லாத வாழ்க்கை
எத்தனை நன்றாக இருந்தது
இந்த சில நாட்களுக்கு முன்புவரை
எனக்குள் இருக்கும்
காலியிடங்களை (vacuity)
கொடுங்கோல் செய்துக் கொண்டிருந்த
வெறுக்கைகளுக்கான முறிவுகள்தான்
தற்போதைய சிலரின் கடப்பு சுணக்கம்(transit delay)
அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான
போதிய அளவு மறைநீராக
என் கவனிப்புகள் கோலேச்சுகிறது
என்பதை அறிந்திருந்தும்
ஞெமன்கோலின் பிடிகளில்
சமனில்லாமல் சிக்கிக்கொண்டாடும்
தட்டேந்திய
பாரங்களின் ஏற்றத் தாழ்வுகளைப்போல
பல கணக்குகளுடன் நகர்கின்றனர்,,
அங்குதான் ஏற்புடைமை தகர்கிறது
ஆனால்
எனக்கான நேர்மைத் தகவானது
சான்று விளக்கங்கள் அற்றது
எங்கெங்கோ சென்று
யார் யாருடைய விருப்பங்களையோ
நிறைவேற்ற
எத்தனையோ மையல்களுக்குள்
என்னை ஆழ்த்திய பொழுதெல்லாம்
அங்கும் துளி கண்ணீர்தான் கசிகின்றதா
என்று பார்ப்பதையே பழக்கப்படுத்திக்கொண்டேன் ,,
தவறுகளிலும் தவித்தது
தட்டுப்படாத ஒன்றைத் தேடித்தான்
எதைக் கொடுத்தாவது
அதைப்பெறமுடியுமா என்றே
எனைத் தேடியவர்களை
என் தேடல் தீர்மானித்தது
நான் சரியா தவறா என்று
எனக்குத் தெரியவில்லை
என் சரிகளும் என் தவறுகளும்
எனை நாடும் எவரின் வாழ்க்கைக்கும்
சரியானதாக மட்டுமே இருந்திருக்கிறது
என் கடந்த காலங்களிலும்
அவர்களை நான் கடந்த காலங்களிலும்
என் சவால்களின் போக்கில்
மரணமும் இடம் பெற்றிருந்தது
முழுமையாக வாழ்ந்துவிட்டோம்
என்கின்ற எள்ளல்களாகக்கூட
இருக்கலாம் இவைகள்
என் நிராசைகளின் வாடைகளை
அன்றே வெளியேற்றிவிட்டதனாலோ
என்னவோதான்
இன்றென் ஆசைகளுக்கான காலாவதிகள்
செல்லுபடியாகிக் கொண்டே
இருக்கின்றது
இந்த விந்தைகள் பிடிக்கவும் செய்கிறது
எனக்குள் வாழும் ஆசைகளைத்
துளிர்விடச் செய்து
மறைந்துபோகும் யாவருக்கும்
கடமைப்பட்டிருக்கிறேன்
இனியும் இழப்பதற்கு
என்னிடம் ஒன்றும் இல்லை
இதுவரை எதிர்ப்பார்ப்பு என்னும்
அரக்கனின் தொடர் மிரட்டுதல்களுக்கு
பிடிகொடுக்காமல்
சுருண்டு கட்டுண்டுக்கிடந்தேன்
என் வியர்வை குழைகொண்ட
தனிமைசேக்கையில்
இடர்விடாத கலகலப்புகளை
நித்திரையில் தூவி
நரம்போடுப் பின்னச்செய்து
அழகு படுத்திப்பார்த்து
பின்பு உருவியெடுத்துவிட்டு
அதற்கான மாதிரிதான் நான்
தற்காலிக அழகுக்கூடாரம்தான்
என் உணர்வுகள் என்றாலும்
இனியேனும் நேசித்தவைகளை கேளுங்கள்
என்ற கேள்விகள் வேண்டாமே,,
அடையாளமற்று
கூளங்கள் என மண்டிக்கிடப்பினும்
என்னோடு ஒட்டிப்பிறந்தவைதான்
இவ் அன்புச்சாலிகைகள்
ஆம்,,இவன் வேட்கைகளுக்கு அப்பாற்பட்ட
ஓர் ஆண் தேவதை என்பதால்
ஆயுள் தீருமானவரை உதிர்த்துக்கொண்டே
போகிறேன்
அனுசரன்