கவிதை = முதல் பிரசவம்

முதல் பிரசவம்
=============

நுண்ணிய வெண்மணியை
கருவாகக் கொண்டாள்
கருவில் உருவம்
செய்து வைத்தாள்

ஐயிரு திங்களாய்
உயிர் வளர்த்தாள்
மின்னல் கீற்றாய்
வலி பொறுத்தாள்

சூடாக அருந்தினால்
சுட்டுவிடும என
சூடாற்றி
அருந்தினாள்

பிஞ்சின் நலனை
நெஞ்சில் கொண்டாள்
பஞ்சு கால்களின் உதைப்பில்
பிரபஞ்சம் மறந்தாள்

மருந்துடனே தாதியும்
தந்த நாளும் வந்தது
மருத்துவமனையை
நாடியே சென்றாள்

ஓராயிரம் வேதனையை
ஈருதட்டில் தேக்கினாள்
வானவர் உலகின்
வாசலை தொட்டு வந்தாள்

தாமரையாளின்
மடியில் அல்லி மலர்ந்தது
அமுத மொழியாளின்
அழகு முகம் ஒளிர்ந்தது

மறு பிறவி
என்றாலும்
முதல் பிரசவமும்
பரவச சுகம் தானே?

= திலீபன்

எழுதியவர் : திலீபன் (எ) ரவீந்திரன்.வை (24-Jul-14, 4:47 pm)
பார்வை : 541

மேலே