சூழும் பேதங்களைச் சூளுரைத்து மாற்றிடுவோம்1
சாதிப் பிரிவுகள் ஆயிரம் கண்டோம்
சண்டை சச்சரவைத் தலைமேற் கொண்டோம்
நீதி முறைமையை முற்றாக மறந்தோம்
நெருப்பெனப் பகையை நெஞ்சினில் வளர்த்தோம்
வேற்றுமை உணர்வுகள் வேலெனப் பாய்வதுவோ
வேரோடு தமிழினத்தை வீறுகொண்டு சாய்ப்பதுவோ
மாற்றார் சூழ்ச்சிக்குப் பலியாகிப் போவதுவோ
மறத்தமிழர் தம்பெருமை மறந்திங்கு வாழ்வதுவோ
சூழும் பேதங்களைச் சூளுரைத்து மாற்றிடுவோம்
சான்றோர் வகுத்த நேர்வழியை நாட்டிடுவோம்
பாழும் பகைமையை வெறியாட்டி ஓட்டிடுவோம்
ஒற்றுமை வாழ்வினை உலகினுக்குக் காட்டிடுவோம்