நிலைபெறநீ வாழியவே தமிழ்வாழ்த்து

காப்பியனை ஈன்றவளே!
......காப்பியங்கள் கண்டவளே
கலைவளர்த்த தமிழகத்தின்
......தலைநிலத்தில் வாழ்பவளே
தாய்ப்புலமை யாற்புவியில்
......தனிப்பெருமை கொண்டவளே
தமிழரொடு புலம்பெயர்ந்து
......தரணிஎங்கும் ஆள்பவளே

எங்கள்எழில் மலேசியத்தில்
.......சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
.......இனங்காவல் தருபவளே
பொங்கிவளர் அறிவியலின்
.......புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்திஇன்று மின்னுலகில்
.......புரட்சிவளம் வருபவளே

செவ்வியலின் இலக்கியங்கள்
.......செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
.......செம்மாந்த பழையவளே
அவ்வியலில் வேரூன்றி
.......அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
.......ஆளுகின்ற புதியவளே

குலங்கடந்து நெறிகடந்து
......நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
......கொலுவிருக்கும் தமிழணங்கே
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
.......நினதாட்சி தொடருமம்மா
நிலைகுறயாச் செம்மொழியே
.......நிலைபெறநீ வாழியவே

......................மறைந்த இறைஅருட்கவிஞர்,தொல்காப்பிய ஞாயிறு செ.சீனி நைனா முஹம்மது ஐய்யா அவர்கள் இயற்றிய தமிழ் தாய் வாழ்த்து பாடல்......

எழுதியவர் : செ.சீனி நைனா முஹம்மது (8-Sep-14, 11:20 am)
பார்வை : 1785

மேலே