சவக்குழி------அஹமது அலி-----

மூன்றுக்காறென்ற
முறையான அளவில்
வெட்டப்படும்
உன்னைக் கேட்காமல்
உனக்கொரு வீடு
கட்டப்படும்!

பளிங்கு மாளிகை
பல இருந்தாலும்-இறுதியில்
பதுங்கும் குழி
சவக்குழி!

கதவு சன்னல் கிடையாது
பூட்டும் வீடு திறக்காது
சாவி இல்லாத வீடு
காற்றும் புகாத வீடு!

எறும்பண்டாத
எண்சான் உடம்பை
மண்ணும் கறையானும்
மாறி மாறி உண்ணும்!

உண்ணும் பிராணியாய்
உயிர் வாழ்ந்தவன்
உண்ணும் உணவாய்
உள்ளே கிடக்கிறாய்!

ஆட்டமாய் ஆடி
அடங்கிய பின்
கூட்டமாய் வந்து அடக்கிட
வந்திடும் அமைதி
அது தான் சமாதி!

உள்ளே வைத்த பின்
விரைந்து மூடுவது
எழுந்திடுவாய் என்பதற்கல்ல
நாங்கள் விரைந்திட!

வெளிப் பார்வைக்கு
உனக்குள் அமைதி
உள்ளே உனக்கு
என்ன குமுறலோ?

நாயும் நரியும்
ஆந்தையுமே சுற்றமாகும்
உறவுகள் பற்று அங்கே
குற்றமாகும்!

வழியனுப்ப வந்தவர்களும்
வருவார்கள் இங்கே
வருந்தாமல் நீ செல்லு முன்னே
வருகிறோம் உனக்குப் பின்னே!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (19-Sep-14, 9:23 am)
பார்வை : 252

மேலே