இதயதேசத்து இம்சையரசி
கவிச்சுடரே
கவியில் பிழைதிருத்தும்
கண்ணம்மா - இந்த
கவியின் நலம்விரும்பும்
செல்லம்மா..
நான்கரை ஆண்டுகள்
நட்போடு நகர்ந்துவிட்டது
நடந்தேறிய நாடகங்கள்
எதிலுமா எனை வெறுக்கவில்லை..?
தமிழன்னை பரிசளித்த
பொற்கிழியே!
தவறுகள் கண்டுமா - எனை
ஒதுக்கவில்லை...?
தொட்டவையாவும்
துலங்காதபோதும்
தோல்வியே இவளுக்கு
நிலையானபோதும்
உறவுகளின் வஞ்சத்தில்
வதைபட்டபோதும்
பணமிழந்து பொருளிழந்து
பிச்சையெடுத்தபோதும்
பெற்றவளே சிலநேரம்
குற்றம் சொன்னபோதும்
சீ !
என்று விலகிடாமல்
சேர்த்துக்கொள்வதேனடி...?
பால்வடியும் பூவே
தேன் சூழ்ந்த தீவே
வான்மாட ஒளியே
நான்பாடும் கவியே
பாதாளி என்மீதா - நீ
பாசக்கணை தொடுக்கின்றாய்..?
அழலென்று தெரிந்துமா
அன்பை வாரி இரைக்கின்றாய்?
வரமாக வந்தவளே
வணக்கத்திற்குரியவளே
என்
நட்பு குளத்தின் ஒற்றை தாமரையே
இதயதேசத்தின் இம்சையரசியே
வரங்கள் சில கேட்கின்றேன் - என்
விருப்பம் நிறைவேற்றிடு
கோபம்கொள்
கொடும்வார்த்தை பேசு
மன்னிக்காதே - எனை
நிராகரித்துவிடு
கன்னத்தில் அறை
காரி உமிழ்
முகத்தில் விழிக்காதே யென - எனக்கு
முழுக்குப் போடு
பாசநதியே
பட்டுவிடா நட்பே
நேசக்குடையே - நான்
நனையும் மழையே
பழகிப்போன ஏதேனுமொன்றை
நீயும் செய்யடி....
மாறாக ஏனடி?
எந்நாளும் துணையிருந்து
எனக்காக கண்ணீர் விட்டு
எல்லாம் மாறுமென
மனதை தேற்றுகிறாய்
உனை இழந்திடுவேனோ - என்ற
அச்சத்தை தூண்டுகின்றாய்...!