என்ன எதிர் பார்க்கிறது இந்த வேடிக்கை விதி

என்ன எதிர்பார்க்கிறது
இந்த வேடிக்கை விதி
என்னிடம் !

வெறி கொண்ட வேட்டை நாயாய்
மூச்சிரைக்க என்னையும்
இழுத்துக் கொண்டு
என் முன்னே செல்கிறது
பிரயாசைகளும் தோல்விகளும்
நிறைந்த பாதையில் !

வெறுமை மிகக் கொண்டு
வெட்டி விட நினைத்து
முகம் திருப்பி நடக்கிறேன்
பிடரியில் கை வைத்து
பின் தொடர்ந்து வருகிறது
என் நிழல் போல் விதி !

சும்மா இரு என்று
சப்தமாய் அதட்டி
கை கட்டி கண் மூடி
வாய் பொத்தி கிடந்தேன் !
உச்சந் தலை ஏறி ஒய்யாரமாய்
சம்மணமிட்டு அமர்ந்தது விதி !
விக்ரமாதித்தனின்
வேதாளம் போல !

என்ன எதிர் பார்க்கிறது
இந்த வேடிக்கை விதி
என்னிடம் !!!

எழுதியவர் : thilakavathy (19-Nov-14, 12:11 pm)
பார்வை : 102

மேலே