நலமாய் வாழ்வீர் நாட்டிற்கும் உழைப்பீர்

இளைய சமுதாயமே ...

ஒரு நொடியாவது சிந்தித்துப் பார்

வாழ்வின் நிலையை பகுத்துப் பார் !

உந்தன் இலக்கை நிர்ணயித்துப் பார்

தூரத்தை மறந்து அடைந்திடப் பார் !

**********

வருங்கால வளர்பிறைகளே ...

கற்கால வாழ்வினை படித்துப் பார்

தற்கால நிலையை எண்ணிப் பார் !

சிகரத்தை தொட முயற்சித்துப் பார்

சிந்தனை மாறாமல் பயணித்துப் பார் !

**********

விருட்சத்தின் விழுதுகளே ...

முன்னோரை நினைத்து முன்னேறப் பார்

எந்நாளும் ஈரநெஞ்சுடன் வாழ்ந்துப் பார் !

முதியோரை வணங்கி வாழ்ந்திடப் பார்

விதியெனக் கூறாமல் மதிகொண்டு பார் !

**********

விளையவுள்ள வித்துக்களே ...

இனமொழி பற்றுடனே வாழ்ந்துப் பார்

இல்லாமை போக்கிட வழியினைப் பார் !

கல்லாதவர் இல்லாத நிலைவரப் பார்

பொல்லாமை போக்கிட வழியும் பார் !

**********

மனித பிறப்பின் மகுடங்களே ...

சாதிமத உணர்வினை துறந்துப் பார்

சமத்துவ சமுதாயம் உருவாக்கப் பார் !

குற்றமே புரியாத நெஞ்சங்களைப் பார்

வெற்றி பாதைக்கு வழிதேடிப் பார் !

**********

ஏற்றமிகு எதிர்காலம் உங்கள் கரங்களில்
இன்பமாய் இருப்பதும் உங்கள் வழிமுறையில்
துணிவே துணையாய் உங்கள் வாழ்வினில்
நலமாய் வாழ்வீர் நாட்டிற்கும் உழைப்பீர் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Nov-14, 9:13 am)
பார்வை : 115

மேலே