இலைமறைக் காய்கள்

என்ன கிழித்து விட்டோம்
இலைமறை காயெனச் சொல்லி..?

இளநீரெனச் சொன்னான்
ஒருவன் ... மாம்பழமென
மருகிக் கிடந்தான்
மற்றொருவன்.... உறுப்பை
உணவாக்கி
வக்கிர வியாபாரம் செய்வதெதற்கு......?

முலையெனச் சொல்... மூளைக்கு
முலையின் வேலை
பால் சுரப்பதுவெனப் பாடு..
குடித்து வளர்ந்திருந்த
எவனொருவனும்
சிதைக்கும்முன் யோசிக்கலாம்.... எதிர்நாளில்..

பிள்ளை பிறப்பதெப்படி....?
பிள்ளை கேட்டால்...
அடித்து... அமுக்கி அடக்குகிறோம்.....
எதற்காக..?

நெகிழ்ந்த
யோனிப்பிளவில் குறிசெலுத்தி
விந்து பீய்ச்சியிருந்த
நன்னொரு நாளில்.... நீ
கருவறைக்குள் நிச்சயிக்கப்பட்டு
வளர்ந்தாயென...

நிகழ்ந்ததை
நிகழ்வாகப் போதி....
கற்றுக்
கொடுப்பதொன்றும் துய்ப்பதல்ல...

மானுட ரகசியங்கள்
உடைக்க..பூசாரிகளாய் பலியாடுகள்
சுவைத்து வஞ்சிக்காதே...

பிரசவிக்கும் பெண்ணின்
கைபற்றி வலிபகிர்....
பெற்றவளைப் போலத்தான்
பிற பெண்களுக்குமென
பகிர்ந்ததை பக்குவமாக
பிள்ளைக்குப் பழக்கு......

ஒருவனால் ஒருத்தி
நெகிழ வேண்டும்... ஒருத்தி
வலியை ஒருவனே
பகிர வேண்டுமென உணர்த்தி விதை..

ஆணுறுப்பில் வலிக்கிறதெனவோ
யோனித்துவாரம்
எரிகிறதெனவோ... சொல்லக் கேள்...
அங்கே... இங்கேயென..
உடம்பில் முகவரிகள் தேடும்
கைகாட்டல்கள் உதறிவீசு....

இரத்தம்.. இதயம்... கணையம்..
மூளை..
இதுபோலத்தான்...
முலைகளும்... குறிகளும்..
யோனியும்...?

அடுத்தவன் மொழியைக்
கடன்வாங்கி...

"பிரஸ்ட்".... "பெனிஸ்" ...
"வஜைனல் இன்பெக்சன்"
ஆஸ்.....!!

ஆங்கிலச் சாக்கில் முக்காடிட்டு
தமிழ்ச்சதை
வெட்டுவதா நாகரீகம்...?

சந்ததிகளுக்கான இயக்கமதை
"பக்"கென கோபமாய்
வெளிப்படுத்துகிறவனை கொண்டாடுவது
தவிர்....!

வெறுப்பு துப்ப "ச்சீய்"
இருக்கிறது...! நட்பு பாராட்ட “தோழா“
தவழ்கிறது....

படுக்கையறைகளை
கழிப்பறைகளாக்கிப் பின்
கழிப்பறைகளை படுக்கையறைகளாக்கிக்
காமம் கற்றவனின்
கலாச்சாரம் போற்றாதே.....

அகநாநூற்றுத் தலையணையில்
பூக்கள் போர்த்திப்
புணர்ந்து திளைத்திருந்த
வரலாறுகளின் வித்து நாம்.....!!

அவைகளை.. அவைகளாகவே
தொடர்வோம்...!!

எழுதியவர் : நல்லை.சரவணா (29-Nov-14, 10:03 am)
பார்வை : 178

மேலே