நல்லதைச் சொல்வோம்

"மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகளிலேயே புனிதமானது திருமண பந்தம்தான். எப்படி நெருப்பில்லாமல் மனித முன்னேற்றம் இல்லையோ அதைப்போல, இல்லற உறவின்றி வாழ்க்கை இல்லை'' என்ற ராபர்ட் இங்கர்சாலின் அனுபவ மொழி திருமண வாழ்வின் யதார்த்தத்தை பதிவு செய்கிறது. பருவத்தில் திருமணம் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. திருமண பந்தத்தினாலேயே மனிதன் முழுமை பெறுகிறான். திருமணமே அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம். ஆனால், திருமணம் என்றாலே இன்றைய இருபால் இளைஞர்களும் மிகவும் யோசிக்கின்றனர்.
திருமணம் செய்து கொண்டவர்களும், "உனக்கு என்னப்பா நீ சுதந்திரப்பறவை, நான் குடும்பஸ்தன்'' என்று சலித்துக் கொள்வதை அடிக்கடி நாம் கேட்கத்தான் செய்கிறோம். பருவமடைந்த இருபாலரிடமும் திருமணம் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவுவதையே காணமுடிகிறது. அவர்களைப் பொறுத்தவரை குடும்பம் என்பது கூடுதல் சுமை. திருமண வாழ்வு குறித்து இப்படி தவறான புரிதல்கள் கொண்டோரில் பலர் நம் கலாசாரச் சீரழிவின் உச்சம் எனப்படும் "லிவிங் டு கெதர்' வாழ்க்கைக்கு தலைப்படுகின்றனர். இதனால் குடும்பம் என்ற சுமையில்லை; குழந்தைகள் பெற்றுக் கொள்வது கட்டாயம் இல்லை; இருவருக்கும் தேவை நிறைவேறிய பிறகு பிரிந்து கொள்ளலாம் என்பன போன்ற வசதிகள் இளைஞர்களைப் பெரிதும் அதன் பக்கம் கவர்ந்திருக்கிறது.
ஆனால், உடல்தேவையை மட்டுமே பெரிதும் சார்ந்திருக்கக்கூடிய இந்த வாழ்க்கை முறை விரைவில் அலுத்துப் போகும். ஏனெனில் திருமணத்தின் மூலம் கிடைக்கக்கூடிய உடல்ரீதியான, மனோரீதியான நன்மைகள் எதுவும் "லிவிங் டு கெதரில்' கிடைப்பதில்லை. தற்காலிக உறவுகள் மனதிற்கினிய பூக்களாய் மணம் பரப்பலாம். ஆனால் இந்த நறுமணம் கதிரவனின் ஒரு நாள் பயண காலமே நீடிக்கும். திருமணம் வழியாக கிடைக்கும் விதைகள் நம் சந்ததியை வளர்ப்பதோடு நீடித்த இன்பத்தையும் தரும்.
திருமணம் செய்துகொள்ள விருப்பக் குறைவுடன் இருப்பது வெகுவாக ஆண்களாய் இருந்தாலும், திருமணத்தால் அதிக பலன் அடைவது அவர்களே. ""ஆண்கள் திருமணத்திற்குப் பிறகே மனச்சோர்வுகள் மற்றும் கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள்'' என்பது உலக சுகாதார நிறுவன ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் பிரிந்து வாழும் தம்பதிகள், துணை இறந்ததால் தனிமையில் வாடுவோர், விவாகரத்து பெற்றுக்கொண்டோர் போன்றவர்கள் அடையும் மனச்சோர்வுகளே இதற்குச் சான்று. உறவுகள் மற்றும் சமூகத்தை விட்டு விலகி வாழ முற்படும் இவர்களது செயல்களே இதை உறுதிப்படுத்தும்.
"பிரச்சனைகளும், அவற்றை எதிர்கொள்ளுதலுமே வாழ்வு. தெளிந்த நீரோடையில் படகைச் செலுத்துவதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும். புயலும், காற்றும் நிறைந்த சமுத்திரத்தில் கப்பலோட்டுபவரே தலைசிறந்த மாலுமி'' என்பதை இன்றைய இளையதலைமுறை கவனத்தில் கொள்ள வேண்டும். நாகரிகத்தின் அடிப்படை குடும்பமே. மிகச்சிறந்த சமூக கட்டமைப்பிற்கு குடும்பத்திற்கு மாற்று வழி என்றுமே கிடையாது.
(இக்கட்டுரை நம் குடும்பம் நவம்பர் இதழில் இடம் பெற்ற கட்டுரை)

எழுதியவர் : எழில்வேந்தன் (29-Nov-14, 8:56 pm)
சேர்த்தது : 4455555
Tanglish : nalladhaich solvom
பார்வை : 242

மேலே