உனது விலை என்ன - இராஜ்குமார்

உனது விலை என்ன ?
~~~~~~~~~~~~~~~~~~

வந்தாய் ..அமர்ந்தாய்
நின்ற நிலையில் நான்
பார்த்து முடித்து நீ ..

உன் முடிவை ஏற்கும்
என் குடும்ப பார்வை..

" சரி " ..சொல்லோடு சேர்ந்த
" மத்தது எப்படி "
என்ற வார்த்தைக்குள்
வாழ நினைக்கும்
உனது குடும்ப ஆசை ..

பல முறை
சிறு விலை பேசும்
அந்த விடுதிக்கும் ...

ஒரு முறை
பெரும்விலை கேட்கும்
உன் வீட்டிற்கும்
நூலுமில்லை வித்தியாசம்...

முடியும் எனில்
ஊரின் முன்னின்று
உனது விலையை உரை ...

நீ கேட்கும் விலையை
நான் உன்னிடம் கேட்க
ஓர் நொடி போதாது ..

ஆனால் அந்நொடி
மனிதம் வாழும் மனதில்
இறந்தாலும் பிறக்காது ..

பொருளென நினைத்தாயோ ?
பெண்ணின் மனதை ..

உருவம் மாறினால்
உள்ளுணர்வு மாறிடுமோ ?

உடலுக்குள்
உயிர் ஒன்றே ...
உனக்கும் எனக்கும் ..

கர்வம் கலையும்
கணங்களில்
காசு காற்றில்
கருகிய சாம்பலடா ..

முதலில் மனிதம் பேசு
பின் காதல் பேசு...

பெண்ணின் புத்திரனாய்
பெண்மை உணர்ந்திடு ...

ஏதுமில்லை என்றாலும்
ஏதும் வேண்டாம்
அன்பு போதும்
என்ற ஆழ்மனதோடு
திருமண முடிச்சிக்குள்
மூழ்க வா ...

அப்போது ...
அனுபவ சுடரால்
அர்த்தப்படும் உன் வாழ்வு ..

-இராஜ்குமார்


கரு கொடுத்தமைக்கு
நன்றி : தங்கை பிரியா ..

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (21-Dec-14, 12:52 pm)
பார்வை : 408

மேலே