சர்க்கரைக் கதை 3

இன்சுலின்பால் இசைந்திடாத செல்ல னைத்தும்
எரிப்பதில்லை குளுக்கோசுக் கூடுகுமிழை..
தீயுறிஞ்சி உடைபடாத சர்க்கரை யதுவும்
சேர்ந்ததுகாண் நீரிழிவாய் குருதிக்குள்ளே....

நீராகாரம் பருகிப்போன நெல்லுநாடன்
நீரிழிவால் படுத்ததில்லை முன்னொரு காலம்
பச்சைக்கீரை பழுத்தபயிறு தின்றநாவும்
ருசித்துப் போய் சேர்ந்ததுவே இனிப்புமென்று...

நெல்வித்தாய் நல்மரபாய் நாமு மிருந்தோம்..
நடுவில்வந் தேறியதே நச்சுமரபும்...
குளிர்தேசப் பதமாகி யடைத்த கறியும்
கொடுங்கோடை நிழலின்கீழ் மென்று வளர்ந்தோம்....

அடிவயிறு அக்குள்புறம் கொடியிடையென
அங்கமெங்கும் கருணையற்றுச் சதையும் பெருத்தோம்..
கொழுப்புதின்று இன்சுலினை கொலையுஞ் செய்தே
கோடிகளில் இறக்குமதி இன்றும் தொடர்ந்தோம்..

உடுத்துவதில் உனக் கிருக்கும் உரிமைபோல
உணவுதனில் நீயுங் கேட்டால் செத்துப் போவாய்...
தலைமுறைக்கு நோய்கொடுத்த தறுதலை யென
தவறாமல் காறித்துப்பி சந்ததி பழிக்கும்..

எப்படியும் தடுக்க விழை.....
வெள்ளென வெறும்வயிற்றில் நீர்நிரப்பு...
வேக்காட்டு அரைநிலையில் மென்று உண்...
வியர்வைத்துளி வழிந்தோட வேலைபழகு...
வீண்பகட்டு உணவுகளின் கதவை மூடு...

தமிழுணவில் வாழ்ந்துவிடு...
தரணி மீண்டும் வென்று எடு......


இந்த சர்க்கரைக்கதை மூன்று பகுதிகளாக பிரித்து எழுதியிருக்கிறேன். சர்க்கரை வியாதிக்கு ஒரு விழிப்புணர்வு உண்டாக்கும் விதமாக நான் படித்ததை எனக்குத் தெரிந்த அளவில் எழுதியிருக்கிறேன். இது கண்டிப்பாக விழிப்புணர்வுக்கு மட்டுமே.. எனக்கு இலக்கணம் தெரியாது. என் எந்தப் படைப்புகளும் போலவே இப்படைப்புகளும் இலக்கண விதிகளுக்கு உட்படாது. ஆகவே இலக்கண விதிகளை கற்றுத் தேர்ந்த மரபுக் கவிஞர்களும் தமிழறிஞர்களும் தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள்....! நன்றி

எழுதியவர் : நல்லை.சரவணா (5-Jan-15, 5:21 pm)
பார்வை : 213

மேலே