இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதை போட்டி -2015

குறுஞ்செய்தியால் குரல் அலையால்
நம் செல்லிடப்பேசி நிரப்ப வேண்டாம்

கடற்கரையில் கால் நனைத்து
கதை பேச வேண்டாம்

கார் முகில் உன் கூந்தல்
கதர் வெண்மை எந்தன் மனம் -என
கவிதை பாட வேண்டாம்

முத்தம் முதல் முனகல் வரை
கற்று தெரிந்து களிப்புற வேண்டாம்

காதலின் இலக்கணமாய் இன்று வரை சொன்னதெல்லாம்
புராதான பொய்யடி

இப்படி நாம் காதலிப்போம்

எனக்குள் உள்ள பெண்மையை -நீயும்
உனக்குள் உள்ள ஆண்மையை -நானும்
ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்வோம்

என்னுள் உறைந்துள்ள அடக்குமுறையை
உன்னுள் ஒளிந்துள்ள அடக்கமுடைமையை
களைந்தெறிய வழி வகுப்போம்

ஈருடல் ஓருயிரானாலும் சுதந்திரம் தனிதனி
உள்ளத்தால் உணர்வோம்

நம் கடந்த கால காதல் குறித்து
கண்ணீர் கடந்து பேசுவோம்

உன் தோழர்களை நீ அழை
என் தோழிகளை நான் அழைக்கிறேன்

நம் அழகு காதல் அவர்களோடு தொடங்கட்டும் .........

எழுதியவர் : பா.மணி வண்ணன் (7-Jan-15, 11:09 pm)
பார்வை : 96

மேலே