சாதி ஒழி மதம் அழி சாதி -பொங்கல் கவிதைப்போட்டி 2015

"சாதி ஒழி !மதம் அழி!சாதி .பொங்கல் கவிதைப்போட்டி 2015
உன் கழிவை நீ அகற்றி
உன் ஆடையை நீ கழுவி
கடலில் இறங்கி மீன் பிடித்து
கோவணத்தோடு ஏரேற்றி
உன் உழைப்பில் நீ உண்டு
உறங்கிப்பார் அன்று புரியும் உன் சாதி எதுவென்று...!!!
தொழிலால் பிரிந்தவரை சாதிகளாய் பிரித்து
வணங்கும் முறையில் பிரிந்தவரை மதங்களால் பிரித்து வேதாந்தம் பேசிப்பேசி
வேற்றுமையை விதைக்குது
முளைவிட முன்னமே விஷத்தை ஊட்டுது
துளிர் விடும் வேளையில் சாதி தூபம் காட்டுது
மலர்ந்திடும் வேளையில்
மதம் பிடித்த விலங்காய் மாறுது...!!!
சாதிவாரி கணக்கீடாம் அரசு சட்டம் எடுக்குது
சாக்குப் போக்கு சொல்லி மத சங்கம் வைக்குது
இதை மாற்ற நினைக்கும் வாலிபர் சங்கம் வாடி மடியிது
மறுத்துரைக்கும் விலங்கு கூட்டம் துள்ளிக் குதிக்குது
மனிதனாய்ப் பிறந்து மிருகமாய் வாழ
சாதி கற்றுக்கொடுக்குது
மனிதத்தை தின்று மனித நேயத்தை அழித்து மதம் தான் வளருது...!!!
சாதிகள் இல்லை என்றான் பாரதி
சாதிகள் இரண்டொழிய வேறு இல்லை என்று சென்றாள் தமிழ் மூதாட்டி
தேவையா மானிடா சாதிவெறி
சேர்ந்தே மதத்தை நீ ஒழி
சாதி மதத்தை அழித்தொழித்து
சாதித்து காட்டுவோம் நம் கரம்கோர்த்து...!!!