குறிஞ்சி மலர்கள்

தேநீர் சுரக்கும் மலைகளிலே 
கண்ணீர் புதைந்த கதைகள் உண்டு 
மலைக்கவைக்கும் மலையழகு 
அதில் மசிந்த வாழ்க்கையை 
கண்டதில்லையே கலையுலகு 

மழைக்கால தேநீரில் 
குளிர்காயும் மனங்களே 
மழைக்காலமே வாழ்வாகிப்போன 
எம் வாழ்வில் தேநீர்தர கரங்கள் ஏது 

சாதியம் பார்க்கும் சந்ததிகளே 
மலசல கூடம் அற்ற மலையடி தோட்டம் 
அதில் மலர்ந்த இலைகள் அல்லவா 
நீர் அருந்தம் தேநீர் 

வாழ்க்கையின் அசைவுகள் 
தீவிரமானது 
எங்களின் வாழ்விலோ 
தீ வரமானது -அதனாலோ 
கண்ணீரோடு தீ சுடுகிறது 

நாட்டின் உயர்ந்த இடத்தில் 
வாழ்கிறோம் -ஆயினும் 
தாழ்ந்தே கிடக்கிறது 
நம்வாழ்க்கை -வாழ்கிறோம் 
உயரும் எனும் நம்பிக்கையில்

எழுதியவர் : இணுவை லெனின் (10-Feb-15, 12:25 pm)
பார்வை : 341

மேலே