முதல் முதலாய்

இயக்க நிலையிலேயே யிருக்கிறது
அவ்வீடு. சிலநேரம் நதியைப்போல
சிலநேரம் கடலைப்போல.

வருவோர்க்கும் போவோர்க்கும்
காற்றசைவில் சேதிசொல்லும்
உலர்துணிகளின் தோரண வாயில்.

அழுகுரலும் சிரிக்கும் நிரலும்
இணைய கொட்டும் மழையென
நெகிழ நனைக்கிறது
மகிழப் பாய்கிறது

ஏதேதோ கேட்கப்பட்டும் சொல்லப்பட்டும்
படியா வார்த்தைக் குட்டுகள்
புரியா வடிவங்களேறியபடியே.

சுமார் இரண்டரையடி
உயரத்திற்கு மேல்
பயணிக்கிறது பொருள்களெல்லாம்
துரிதமாக மேலேறியபடியே.

இருக்கும் ஒன்றிரண்டு
அறைகளும் ஒன்றிலிருந்து
இன்றொன்றுக்கு வழிமறுத்து
அவ்வப்போது அடைத்துக்கொண்டபடியே.

சமிக்கைகள் மட்டுமேயன்றி
யாரும் யாரோடுமிங்கே
பல நேரங்களில்
வாய்திறந்து பேசிக்கொள்ளாதபடியே.

முதலிட மோதல்களின்றி
சகலத்திலும் முதலாகியிருந்தது
வழிதேடும் குட்டி ரோபோவைப்போல
கைநீட்டிக் காலெடுத்து
தன்னைத்தானே வியந்து வியக்க
முதல் முதலாய் நடைபயிலும் மழலைதன்
ஆர்ப்பாட்டங்களோடு.

எழுதியவர் : சர் நா (13-Feb-15, 12:06 pm)
பார்வை : 100

மேலே