நினைத்தாலே இனிக்கும்

குறுநகை பூக்கும் குமரியின் கன்னம்
சிறுவிரல் தீண்ட நகும் .

வெட்கத்தில் பாவை வதனம் சிவந்திடும்
பெட்டிக்குள் மாதுளைமுத் தாய் .

கிள்ளைமொழி பேசியே கிள்ளுவாள் உள்ளமும்
தள்ளா டிடுமே தினம் .

மருதாணி யிட்ட மடந்தையின் கைகள்
குருதிபோல் தோன்றும் சிவந்து .

செங்கனியின் தீஞ்சுவையோ செவ்விதழின் தேன்சுவையோ
நங்கையிவள் முத்தச் சுவை .

மையல் நகையொடு மைவிழியாள் நோக்கிட
பையவே காதலரும் பும்

பின்னலில் சூடிய பிச்சிப்பூ வாசத்தில்
தன்னை யிழக்கும் மனம்

முத்துப்பல் சிந்திடும் மோகனப் புன்னகைப்
புத்தம் புதுமல ராய் .

ஏகாந்த வேளையில் ஏந்திழையின் எண்ணமே
பாகாய் இனிக்கும் ருசி .

நாணச் சிரிப்பும் நளின நடையழகும்
காணக் கிடைக்கா வரம்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (6-Mar-15, 4:01 pm)
Tanglish : Ninaithaale inikkum
பார்வை : 261

மேலே