சாதி வெறி
(கௌரவ கொலை என்ற பெயரில் சாதி வெறியில் பெற்ற மகளையே கொலை செய்த கொடூரம் மனதை மிகவும் வதைத்தது அதன் அடிப்படையில் எழுந்த வரிகள் )
உயர் சாதியென்று
ஆணவத்தில்
அலைகிறீரே
உயர்சாதி என்பதற்காக
நீ கழித்த மலமும்
பூச்செண்டாய் மணக்குமோ?
நீ தொடுவதால்
சுடும் நெருப்பும்
குளிர்ச்சியாய் இருக்குமோ?
நீ இறங்குவதனால்
கடலும் தன் ஆழத்தை
குறைக்குமோ?
நீ குடிப்பதனால்
சாக்கடையும்
தேவாமிர்தமாய்
இனிக்குமோ?
நீ உடுக்கும் உடையில்
சாதி பார்த்தால்
நீ
நிர்வாணமாய்
அலையவேண்டியிருக்கும்!
நீ உண்ணும் உணவில்
சாதி பார்த்தால்
வயிறு ஒட்டியே
உனக்கு
பாடை கட்ட
வேண்டியிருக்கும் !
நீ சுவாசிக்கும் காற்றில்
சாதி பார்த்தால்
மூச்சடக்கியே
உன்னை
மண்ணில் அடக்க
வேண்டியிருக்கும்!
நீ குடிக்கும் தண்ணீரில்
சாதி பார்த்தால்
உன்
நாக்கு வறண்டே
நாய் போல் தொங்க வேண்டியிருக்கும் !
இதில் எல்லாம்
சாதியை காட்டி
வாழ்ந்து பார்!
நான் ஒப்புக்கொள்கிறேன்
நீ உயர்ந்த சாதியென்று !
உலகையும் உன் காலில்
விழச்சொல்கிறேன்
நீ உயர்ந்த சாதியென்று !
சாதி பார்த்துதான்
வாழ்வேன் என்றால்
நீ வாழ்வதற்கு
ஏற்ற இடம்
பூமி அல்ல !
மூட்டை முடிச்சை
கட்டிக்கொண்டு
இப்போதே சென்று விடு
வேற்றுகிரகத்திற்கு!