இருளும் காலைகள்
அத்தனை தெருக்களிலும் அந்தநெடி அடிக்கிறது-இங்கு அரசின் கருவிலே அரக்கனொன்று அகல்கிறது!
காவியென்ன!பச்சையென்ன! காந்தியவனின் நெறி மறக்க. கர்த்தரென்ன! கடவுளென்ன! கல்லீரலைக் கள்ளரிக்க.
நடக்கும் பாதையோரம் பிணங்கள் இன்று கிடக்கிறது-நம் மானமற்ற மண்ணில்தான் சாமிகளும் குடிக்கிறது!
மனைவி மக்கள் தினமும் உடல் நொந்து இளைத்திட டாஸ்மாக் தமிழனிவன் குடல் வெந்து இறக்கிறான்.
பன்னாட்டு நிறுவனமாம்-இந்தப் பழக்கம் மிகவும் அவசியமாம், நகரத்தின் இருள்களிலே இளம் பெண்களும் ஆண்களும் சரிசமமாம்!
மாலையானால் குடிக்கிறான்-மாணவன் இவனும் படிக்கிறான், வளரும்வரை மறைக்கிறான்-பின்னொரு குடிமகன் பிறக்கிறான்!
மதுக்கடை தின்ற மீதி மருந்துக்கடை மெல்கிறது,ஆடைகள் மறைத்த மீதி அம்மணமாய் அழுகிறது!
மதுவளத்துறையது தோன்றிடும் போல நிலைமைகள் இதுபோல இன்னும் போனால், பகலவன்கூட பகலிலே துயில கம்பனின் நாட்டில் காலைகள் இருளும்!