ஒருதுளி நம்பிக்கை-ரகு

ஒருதுளி மழையில் உலகு
நனைப்பதென என்னில் ஒழுகும்
நம்பிக்கையோடு ஆயத்தமாகிறேன்
ஒரு அடைமழையில்

மழை பொருட்படுத்தாது
சிறகடிக்கும் சிறு பறவையோடு
என்னை ஒப்பிட்டுக்கொள்வதில்
மீறிவிடவில்லை என் இங்கிதம்

வேட்டையாடும் விலங்குகளின்
கண்களுள் ஊடுருவி
அக்கிரமங்களுக்கு எதிரான
கர்ஜனையை வாங்கிக்கொள்ளத்
துணிந்திருப்பதும் எனதான
அசாத்திய சாமர்த்தியம்

அத்துமீறல்கள் அவலங்கள்
நடந்தேகும் நிலையில்
உறை களைந்த வாளாய்
பளபளக்கிறேன் நான்

சிறகடிக்கும் போதே
பேராண்மைக்குள் நன்மையும்
புகுத்திவிடுவதாகத் துளிரும்
முயற்சியில் அனல் தெரிக்கிறது
அவ்வப்போது என்னுள்

இப்படியாகத் தொடங்கி
வெறுங்கையில் முழம்போடுவதாக
முடிந்த கனவில்
வியர்த்திருந்தேன் ஒருநாள்

வாழ்க்கையை மிச்சம்வைக்கும்
கலை யாதெனக் கற்பிப்பதாக
விடியத் தொடங்கியிருந்தது
என் காலை

மீண்டும் ஒருதுளி நம்பிக்கையோடு !

எழுதியவர் : அ.ரகு (21-Mar-15, 9:07 pm)
பார்வை : 158

மேலே