பாச தீபமே நலமுடன் நீ வாழ்கவே

[பொன்னுமணி படத்தில் வரும் “அன்பச் சுமந்து சுமந்து... அல்லும் பகலும் நினைந்து... இன்பம் தந்த மாமா...” பாடலின் மெட்டுடன் பாடிப்பாருங்களேன். இன்னும் அழுத்தம் புரியும்]
************
என்னைப் பார்த்துப் பார்த்து
தன்னை எண்ண மறந்து
கண்கள் பூத்து நின்ற உயிரே
உன்னை துடிக்க விடுவேனா
***
என்னைப் பார்த்துப் பார்த்து
தன்னை எண்ண மறந்து
கண்கள் பூத்து நின்ற உயிரே
உன்னை துடிக்க விடுவேனா
உன்னை துடிக்க விடுவேனா
*** *** ***
நேற்றுவரை நீ சளைக்காமல்
மாடெனவே உழைத்தாயே
வேர்வையினை சிந்தாமல்
இருப்பதையே வெறுப்பாயே
அதனால்தான் உன்தேகம்
இரும்பெனவே இருக்குதோ
நடைதளர்ந்து படுத்தாலும்
நாரெனவே கிடக்குதோ
***
ஆசையின்றி ஒரு போட்டியின்றி
உன் காலம் இருந்ததே
பாசத்திலே தினம் நேசத்திலே
ஊர் உலகம் வாழ்ந்ததே
அதுவெல்லாம் போனதென
நீநம்ப மாட்டாயா
அவசரத்தில் என்னுலகம்
சுத்துதென அறிவாயா
***
உனக்கெனவே ஒரு நொடியும்
நான் ஒதுக்க முடியலையே
உன்மனதில் உள்ளதெல்லாம்
நான் அறிய வழியில்லையே
பகல் இரவு பார்க்காமல்
அவசரத்தில் ஓடுகிறேன்
காசேதான் உலகமென்று
சுயமிழந்து வாழுகிறேன்
***
எனக்கெனவே தினம் காத்திருந்து
உன் பொழுது மறைந்திடுமோ
மனச்சுமைகள் பெரும் மலையளவு
நாள் தோறும் உயர்ந்திடுமோ
அதையிறக்கி வைத்துவிட்டு
பூமடியில் சேர்ப்பாயோ
பழையகதை பேசிக்கொண்டு
தாலாட்டி விடுவாயோ
***
எங்கேதான் போவாயென
பேரன்எனைக் கேட்பாயே
எத்தனைநாள் ஆனதென
அம்மத்தாநீ அழுவாயே
நேற்றுத்தான் வந்தாலும்
மறந்தேதான் போவாயே
இன்றுநான் வந்ததையும்
மறக்காமல் இருப்பாயோ
***

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (1-Apr-15, 4:57 pm)
பார்வை : 273

மேலே