உனக்கும் அதேதானா
கடையில் பல்லி மிட்டாய் மேல் தட்டிலே வைக்கப்பட்டு இருந்தது. கடைக்கு வந்த சிறுவன், நாலணாவிற்குப் பல்லி மிட்டாய் என்று கேட்டான்.
கடைக்காரர் ஏணியில் ஏறி மிட்டாய் பாட்டிலைக் கவனமாகக் கீழே கொண்டு வந்தார். அவனிடம் பல்லி மிட்டாய் தந்தார். மீண்டும் ஏணியில் ஏறிப் பழைய இடத்தில் பாட்டிலை வைத்தார்.
சிறிது நேரத்தில் இன்னொரு பையன், நாலணா பல்லி மிட்டாய் என்று கேட்டான். கடைக்காரர் வழக்கம் போல ஏறி அவனுக்கு மிட்டாய் கொடுத்து விட்டுப் பாட்டிலைப் பழைய இடத்தில் வைத்தார்.
மூன்றாவதாக வந்த பையன் நாலணா பல்லி மிட்டாய் என்று கேட்டான். கடைக்காரரால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏணியில் ஏறி பாட்டிலைக் கீழே கொண்டு வந்தார். மீண்டும் பாட்டிலை மேலே வைக்கவில்லை.
சிறிது நேரத்தில் இன்னொரு பையன் வந்தான். அவனிடம் கடைக்காரர், உனக்கும் நாலணா பல்லி மிட்டாயா? என்று கேட்டார்.
இல்லை என்றான் சிறுவன். கடைக்காரர் ஏணியில் ஏறி அந்த மிட்டாய்ப் பாட்டிலைப் பழைய இடத்தில் வைத்து விட்டுக் கீழே இறங்கினார்.
பிறகு பையனைப் பார்த்து, இப்ப உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்குப் பத்துப் பைசாவுக்குப் பல்லி மிட்டாய் வேண்டும் என்றான் அவன்.