மனிதன் மரணிக்கிறான்

குப்பன்
தாழ் குலம்...
மாயாண்டி
உயர் குலம்...

சாதிகளின் ஆதிக்கம்
சடுகுடு ஆடிய
ஒரு நாளில்...

மாயாண்டி குலத்து - பெண்ணின்
மானம் காத்து
மரணித்தான் குப்பன்!

தீண்டாக் குலமாய் - இருந்த
குப்பன் இன்று
குலசாமி ஆனான்
மாயாண்டிக்கு என்று - குப்பன்
பாதம் தீண்டி
வணங்குகிறார் பாரீர்!

ஏய் மானிடரே
இன்னும் எத்தனை
குப்பன்கள் மரணித்தால் - உங்கள்
சாதிப் பிசாசின்
பசி அடங்குமாம்?

உயிரோடு இருக்கையிலே
உணர்வுகளை மதிக்காதோர்
உரிமைகளை கொடுக்காதோர் - அவன்
இறுதி ஊர்வலத்தில்
வீரவணக்கம் செலுத்தி
என்ன பயன்?

சாதிகள் மட்டுமே
இங்கு வாழுமென்றால்
உங்களுக்குமாய் சேர்த்து
எங்களை நாங்கள்
மரணிக்கத் தயார்.

                - சுகன்யா ஞானசூரி

எழுதியவர் : சுகன்யா ஞானசூரி (14-Apr-15, 10:30 pm)
சேர்த்தது : மா.உ.ஞானசூரி
பார்வை : 79

மேலே