பிறந்த நாள் பரிசு

....................................................................................................................................................................................................

அம்மா முத்தம் தருவாராம்;
ஆயா அப்பம் தருவாராம்;
மாமா சட்டை கொடுப்பாராம்...
மாமி போட்டு விடுவாளாம்...!

என் பெயரில் வங்கிக் கணக்கெழுதி
ஏட்டை கொடுப்பார் என் தந்தை.
இன்முகத்தோடு அண்ணன் வந்து
ஈசன் சிலையை பரிசளிப்பான்..!

ஐம்பொன் பதக்கம் அணிவிப்பாள்
அருமை மிகுந்த குட்டிதங்கை..
கைக்கெடியாரம் தந்திடுவாள்
கண்மணியாகும் என் தமக்கை !!

அன்னையின் தோழியர் ஒருபக்கம்;
அண்ணனின் தோழர்கள் மறு பக்கம்;
என்னுயிர் நண்பர்கள் வேறுபுறம்-
எப்படி யிருக்கும், குதூகலம் ! ! !

அடிக்கடி அடிக்கடி நினைக்கின்றேன்
அடுத்த பிறவியில் கைகூட!
அளந்தது போதும் நிறுத்துகிறேன்- நான்
அனாதை இல்லச் சிறுவனம்மா !!!!!!!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (1-Jun-15, 8:16 pm)
பார்வை : 81

மேலே