இலையுதிர் காதல்
உனக்கான
ஒவ்வொரு நொடியும்
இப்போது
ஒய்வெடுத்துக்கொண்டிருக்கின்றது...
உதிர்க்கப்பட்ட இலை
மண்ணில்
மட்கிப்போக காத்திருக்கிறது...
இசைத்தப் பின்
வீணைக்கும்
விரலுக்குமான பந்தமிது...
ஒரே வட்டத்திற்குள்
உழன்று கொண்டிருப்பதால்
ஒவ்வொரு
மணிநேரமும்
சந்தித்துக்கொள்ள
நாமொன்றும்
கடிகாரத்தின் முற்கள் அல்ல...
மழையின்
ஒவ்வொரு துளியிலும்
நனைந்து விடும் முயற்சியில்
நான் தோற்றுப்போனேன்...
அன்பின்
ஆழம் வரை சென்று
அகப்பட்டுக் கொண்டேன்...
அதில்
மீண்டு விடுவேன்...
ஆனால்
மீண்டும் வரமாட்டேன்...