எதுவும் புரியவில்லை - உதயா

யார் யாரோ
எதை எதையோ
தேடிக்கொண்டு
ஓடிக்கொண்டிருந்தனர்

தனக்கான பயணத்தை தொடர
தனக்கு முளைத்த சிறகுகளை
ஒடித்து எறிந்துவிட்டு
வளராத சிறகினை சிலர்
வளர வைக்க முயற்சி
செய்துகொண்டிருந்தனர்

எதை தேடுகிறேன் என்று
தெரியாலமே பலர்
தேடிக்கொண்டிருந்தனர்
தன் தேடலின் இறுதி
கண்டுபிடிப்பு மரணம்
என்று தெரியாமலே

தெளிந்த கடல்நீரில்
மீன்களை பிடிக்க முயற்சிக்கு
கொக்குகளை விட
கலங்கிய எரிநீரிலே
மீன்களைப் பிடிக்க
எண்ணிலடங்கா கொக்குகள்
சண்டை போடுகிறது

கெடுதலென அறிந்தே
நகரவாசிகள் குளிர்பானத்தை
அருந்துகின்றனர்
மருத்துவம் தன்மை
வாய்ந்ததுயென அறியாமலே
கிராமவாசிகள் இயற்கை பானங்களை
அருந்துகின்றனர்

தோல்விகளின் தொடக்கத்திலே
வாழ்வினை முடித்துக்கொள்ளும்
இளைஞ்சர்களுக்கு புரிவதேயில்லை
பல தோல்விய மடித்து தோணியாக்கி
சில தோல்விகளை முறித்து துடுப்பாக்கி
வாழ்கை கடலினை கடந்து கரையேறி
இன்னும் நம் கண்முன்னே வாழும்
நம் பெற்றோரின் வாழ்கை

இரவு நேரத்தில்
ஆயிரம் விண்மீன்கள்
இரவினில் தோன்றினாலும்
ஏனோ பகல் நேரத்தில் தோன்றும்
சூரியனெனும் ஒரு விண்மீனிற்காகவே
உலகமே காத்திருக்கிறது

ஆசையை துறந்தவை காண
தொடங்கிய என் தேடல் பயணத்தில்
புத்தனைக் கண்டேன் அவனோ
கணந்தோறும் தியானம் புரிவதும்
ஒரு ஆசையே என்று அறியாமலே
தன்னை துறவி என்றான்

பயம் கூட ஒரு ஆசை என்று
அறியாமலே அதை துறந்து
அனைத்து ஜீவனிடமும் அன்புகாட்டி
வாழ்ந்துக்கொண்டிருந்தான்
அந்த ஆதிவாசி தான்தான்
ஒரு சிறந்த மனிதன் என்று
தெரியாமலே

எவனுக்கு தெரியும்
எவனுக்கு புரியும்
எவன் தான் அறிந்தான்
தன் பிறப்பின் நோக்கத்தையும்
வாழ்வின் இரகசியத்தையும்

எழுதியவர் : udayakumar (17-Jun-15, 1:26 pm)
பார்வை : 142

மேலே