உன்னிடம் யாசிக்கிறேன்...

என் காதலை
உன்னிடம்
சொல்ல வந்தபோது,
நீ என்னை
மறுத்துச் சென்றிருக்கலாம்
அல்லது என்னை
மறக்கச் சொல்லியிருக்கலாம்...

மாறாக
மௌனத்தால்
என் மனதை
கொய்து சென்றாய்.
சம்மதம் என
நீ சொன்னது
தான் தாமதம்...

காதலில் இடைவெளி
அன்பைத்தான்
அதிகரிக்கும்
ஆனால்
நம் காதலின்
இடைவெளியோ
பிரிவை மட்டுமே
போதிக்கிறது...

மௌனத்தையே
மொழியாய்
கொண்டிருக்கும்
உனக்கு என்
ஆர்ப்பாட்டம் கூட
அமைதியாகத்தான்
தெரிகிறது போலும்...

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாகும்
என்று நீ
உணரவில்லையா...?

உன்னை பிரிந்து
செல்வதற்கு
ஒரு நொடி கூட
ஆகிவிடாது எனக்கு
நம் காதல்
பொய்த்து விடக்கூடாது
என்றெண்ணித் தான்
பொறுமையை கடைப்பிடிக்கிறேன்,
உனக்கும் போதிக்கிறேன்...

பிரிவு தான்
நமக்குள் உறவென்றால்
தாமதிக்காமல்
சொல்லிவிடு,
அந்த பிரிவேனும்
உணர்த்தட்டும் உண்மையையும்
என் உள்ளத்தில் உள்ளதையும்
உனக்கு...

உன்னை
சம்மதிக்க வைக்க
நான் எந்த
சாகசமும் செய்யப்
போவதில்லை.
ஆனாலும்
உள்ளத்தை வருத்தும்
உணர்வுகளை நிறுத்தும்
உன் காதலை
யாசிக்கத்தான்
சொல்கிறது
என் மனது...

எழுதியவர் : சக்திநிலா (14-May-11, 11:53 am)
Tanglish : unnidam yaasikkiren
பார்வை : 406

மேலே