பற்றுகோலற்ற மனம் உன்னிடமே

உன் மௌனங்களை
தாங்கும் வலிமைதனை
என் மனமோ இன்னும்
பெறவில்லையடா...
உயிரின் ஆழம் வரை
சென்று வலிக்கிறதே..
உன் வார்த்தை கேளாது
கடத்திடும் ஒவ்வொரு
நொடிப் பொழுதும்!..
என் அலைபேசிதனை - இணை
பிரியாது காவல் காக்கிறேன்,
இதோ அடுத்த நிமிடமே - உன்
பெயர் திரையில் ஒளிருமென்றே...
காத்திருப்புக்களின் முடிவிலே
கண்ணீரே மிஞ்சின- என்
எதிர்பார்ப்புக்களின் வழியிலே
ஏமாற்றங்களே எஞ்சின!
அறிவேனடா நான் - நீ
ஆயிரம் பொறுப்புக்களோடு
பிணைக்கப்பட்டவன் என்று..
சிந்தைக்கு எட்டும் - பல
சத்திய நிலைமைகளை
சட்டென்று மறக்குது மனதும்,
பற்றுகோல் ஏதுமற்ற - என்
உயிர் உன்னோடு படர்ந்திட
எம்பிடும் அந்தக் கணம்!