என்ன செய்ய முடியும் இந்தக் கவிதை
அநீதிகளாலாகிவிட்டது உலகம்.
அது ஒரு தவறை இன்னொரு தவறால்
சரி செய்யக் கற்றுக் கொண்டு விட்டது.
என்னோடு கை குலுக்கியபடியே
என் அனுமதிக்கும் காத்திராமல்
என் வீட்டிற்குள் நுழைந்துவிட்டது அது.
யாரையும் ஆணையிடக் கற்றுக் கொண்டிருந்த அது
என்னை அடிமையாக்கிக் கொண்டிருந்தது.
எனது சிறகுகளைப் பறித்துவிட்ட அது
என் வானமெனத் தரையைக் காட்டியது.
காயங்களோடு....
நெல்மணிக்காகத் தரையில் தவழ்கிறது என் வாழ்வு.
இலவசங்களின் போதையில் என்னைக்
கவிழ்த்து வைத்திருக்கிறது அது.
எனது நதியின் பாதைகளைத் திருடிக் கொண்டுவிட்ட அது
எனது குடிநீரை விற்றுக் கொண்டிருக்கிறது.
வயல்களை வீடுகளாக்கி விட்டு...
உணவுக்குக் கையேந்திக் கொண்டிருக்கிறது.
கல்வியை விற்கக் கற்றுக் கொண்டுவிட்ட அது...
"இட ஒதுக்கீடுக"ளால் வாயை அடைக்கிறது.
பணத்தினால் மனிதனை அளவிடக் கற்ற பின்...
சாதாரணனை "சாதி" களால் பிரித்துச் சிரிக்கிறது.
இப்போது...உண்ணும் உணவே அநீதியாகிவிட...
நானும் விஷமாகிக் கொண்டிருக்கிறேன்.
எல்லாம் அநீதியாகிவிடும் உலகில்...
ஒரு கவிதையால் மட்டும் என்ன கிழித்துவிட முடியும்?