மனம் நடுதல்

கண்ணீர்த் துளிகள் வேகமாய்ப் புறப்பட்டன
அவள் கண்ணாடி பார்த்து உரக்கக் கேட்கையில்...
''பல மொழியில் காதலித்து
பரிதவிக்க வைத்த என் தாய்மொழியான தோழா!
வெடித்துச் சிதறும் இதயத்துகள்களில் தெரிகின்றன பார்
என் இத்தனை வருட கனவுகள் எழுதிய கவிதைகள்...
படித்து விட்டு பார்க்காதது போல் நீ சென்றாலும்
விட்டுச்சென்ற உன் புன்னகையில் புரிந்தது உன் மறுப்பு
அது எப்படி? நான் பூக்கள் நீட்டும் தருணமெல்லாம்
உன் கைகள் ஈர மண் சுமக்கின்றன?
ஜோசியம் அறிந்த தோட்டக்காரனோ நீ?
என் பூங்கொத்து உன் தெருமுனை வரும்பொழுதே
புதிய செடியினை நடத்துவங்கி மண்பூசி மறுக்கின்றன
உன் அப்பாவிக் கரங்கள்!
இன்னும் எத்தனைச் செடிகள் தான் வளர்ப்பாய்?''
...
நிரம்பி வழிகின்ற அவன் தோட்ட மலர்கள் கதறின!
''பல வண்ணங்களில் ஆனந்தமாய் இதழ்கள் முகிழ்கின்றோம்
பல வருடமாய் அவள் பூங்கொத்துக்கள் மட்டும் முகம் வாடி திரும்புகின்றன
போதும் உன் அரவணைப்பு! நாங்கள் வளர்ந்துவிட்டோம்!
இனியாவது அவள் காதலை பெற்றுக்கொள்
வளரட்டும் அவள் கவிப்பூக்கள் சுமந்த கனவுகள்
இதோ! உனக்காக பெய்கிறது புது மழை
கைகளை நீட்டு
கரையட்டும் மண் மனதிலிருந்து
அவள் வருகிறாள்
பூங்கொத்துடன்! ''