உயிர் தாங்கும் கவிதைகள்

இறுதிவரை யான் முயன்றும்,
இயைந்திடவே இல்லை - எந்தன்,
கவிதைகளும் காதல்களும்.
வழிகள் ஏதும் தெரியாமல்,
களம் இறங்கித் தவிக்கின்றேன்.
இரண்டின் தளமும் கும்மிருட்டு,
ஆரம்பிக்கத் தெரியவில்லை
தப்பித் தவறி தொடங்கினால்.
தொடர்ந்து செல்ல முடிவதில்லை.
விதியோ,எதுவோ தொடர்ந்திடினும்,
முடிவை நோக்கியே பயம் எனக்கு.
இவ்வாறாக இரண்டிலுமே,நிகழ்ந்தன
வாழ்க்கையில் சருக்கல்களே.
நீர் வற்றிய ஏரியின் பறவைகள் போல்,
சென்றன கலைந்து காதல்கள்.
ஆல மரத்தின் விழுதுகள்போல் எனை
தாங்கிக் கொண்டன கவிதைகள்.