புற்றுநோயைப் புதைப்போம்

புற்றுநோயைப் புதைப்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

அறிந்தேநாம் தவறுதனைச் செய்யு கின்றோம்
அறிவிருந்தும் அறிவிலியாய் ஆகி விட்டோம்
பொறித்திருக்கும் எச்சரிக்கை படித்த பின்பும்
பொலிவழித்தே நோய்சேர்க்கும் என்று ணர்ந்தும்
அறிவுறுத்தித் தொலைக்காட்சி செய்தித் தாள்கள்
அறிவிப்பாய் நாள்தோறும் அறிக்கை தந்தும்
வெறியோடு வெண்சுருட்டுப் புகையி ழுத்தே
வேதனையில் துடிப்பதுவும் தேவை தானா ?

வெற்றிலையை மென்னுவதில் தவறோ இல்லை
வெற்றிலையில் புகையிலையைச் சேர்ப்ப தாலே
நற்தொண்டை வாய்நாக்கு உதடெல் லாமே
நாளடைவில் ஆறாத புண்ணாய் ஆகிப்
புற்றுநோய்க்கு வித்திட்டே உடலுக் குள்ளே
புரையோடி உயிர்குடிக்கும் என்ற றிந்தும்
சற்றுமதை நினைக்காமல் சுவையே என்று
சாவதற்கு நஞ்சுண்ணல் தேவை தானா ?

வழிதிறந்து வருமானம் பெருக்கிக் கொள்ள
வாய்க்கரிசி போடுகின்ற அரசெ திர்த்தே
விழிப்புணர்வு நாம்கொள்வோம் விரித்து வைத்த
விடவலைக்குள் வீழாமல் காத்துக் கொள்வோம் !
வழிமாறிப் போவோர்க்கே எடுத்து ரைத்து
வாய்த்ததீய பழக்கத்தை விடுக்கச் செய்வோம் !
குழிதோண்டிப் புற்றுநோயைப் புதைப்ப தற்கே
கூடியொன்றாய் செயல்படுவோம் உயிரைக் காப்போம் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (27-Jul-15, 9:24 am)
பார்வை : 301

மேலே