காதலனைத் தேடி

கண்களில் தெரிவானென காதலனைத் தேடிப்போகையில்
குருடான குளத்தங்கரை எனைபார்த்து
கெஞ்சுகிறது

தண்ணீரில்லையாம்
பதிலாய்
என் கண்ணீரை
கேட்கிறது

காணாத காதலனால் ஏற்றிக்கொண்ட
ஏக்கத்தின் விளைவாய் ஏமாற்றம் மட்டுமே நானாகிப் போனேன்

இதோ தருகிறேன் குளத்தங்கரையே எடுத்துக்கொள்
என் கண்ணீரை

வீணாக்கிவிடாதே
காயும் வெயிலுக்கும் விலைபேசி
விடாதே

என் கண்ணீரிலிருப்பது வெறும் உப்பன்று
உயிரில் உயிராகிப்போன
என் காதலின்
சாட்சிகளை
மறைத்து வைத்திருக்கிறேன்
அதனிடத்தில்

என் கண்ணீரால்
நிரம்பி வழியும்
குளமே வாக்கொன்று எனக்களியேன்
எப்போதேனும் என் காதலனிங்கே வரக்கூடும் அவனிடத்தில் சொல்லிவிடு ஆகாயம்
இருண்ட போதிலும்
அவனையே இன்னும்
நெஞ்சில் சுமக்கிறேனென்று,,,

எழுதியவர் : அரும்பிதழ் சே (27-Jul-15, 3:18 pm)
பார்வை : 189

மேலே