ஏழை

எழுத்துக்கள்தான் இரண்டு
அதன் அனுபவம்… எப்படி சொல்வது
இச்சொல்லின் அர்த்தம்
தெரியாதவனிடம் கேட்டுப்பார்
அவன் கவலையும் வலியும்
அடுக்கிக்கொண்டே போவான்
நல்ல வேலை இல்லை
நல்ல சாலை இல்லை
நல்ல மருந்தில்லை
நல்ல பேருந்தில்லை
நல்ல சேவை இல்லை
நல்ல அது இல்லை
நல்ல இது இல்லை
வேட்டுப்போகாத மின்சாரமில்லை
கொட்டுவிடாத சம்சாரமில்லை
அள்ளிக்கொடுக்குற அரசாங்கமில்லை
அடிச்சு புடுங்காத ஆளுமில்லை
ஆறுதலாக அன்புகள் இல்லை
ஆகமொத்தம் நிம்மதி இல்லை
அப்பப்பா பட்டியல்
அமெரிக்காவரை நீளும்
ஏழை விதி சுமந்திருக்கும்
அவனிடம் கேட்டுப்பார்
சிந்திக்காமல் சொல்லும் பதில்
பசிக்கு சோறு இல்லை
உடுத்த உடை இல்லை
வாழ வீடு இல்லை….
மனித உயிர்வாழ
அண்டத்தில் தோன்றி
பஞ்சபூதத்தின் ஆட்சியில்
உருவெடுத்த பூமிதானே இது
ஒரே ஆகாயக்குடைக்குள்ளே
ஏனித்தனை ஏற்றதாழ்வுகள்
கர்மவினை போக்கவந்தவனோ
கயவர்களால் தோற்றுப்போனவனோ
கர்மா தெரிந்திருக்குமா – அவனுக்கே
தெரியாமல் செய்தவை என்று
அல்லது அவன் போற்றும் கடவுள்
சற்றே சக்திகுறைந்தவரோ..
தினம் கேட்கும் வரம் - தராமல்
தூரதேசம் சென்றிருப்பாரோ
ஏழ்மை துடைக்கமுடியாத துயரம்
ஏக்கங்களை புதைத்துவிட்டு
ஆசைகளை துரத்திவிட்டு
நாளை சொந்தமில்லாமல்
வாழும் பாவப்பட்டவர்கள்…
முடிந்தால் ஏழ்மை துடைக்க
வழிகளை கற்றுத்தாருங்கள்
எண்ணிக்கை பட்டியலில்
எண்ணிக்கொண்டிருக்காதிர்கள்.
அவர்களும் மனிதர்களே ‼!