சுதந்திர நாள் உறுதி ஏற்போம்

சுதந்திரநாள் உறுதி ஏற்போம்!
பாவலர் கருமலைத்தமிழாழன்

சாக்கடையாய் நாடுதனை மாற்று தற்கா
--சாந்தமூர்த்தி விடுதலையைப் பெற்ற ளித்தார்
தீக்கனலாய் வன்முறையை எரிய வைத்துத்
--தீய்ப்பதற்கா வஉசி செக்கி ழுத்தார்
தாக்குகின்ற சாதிமதம் வளர்ப்ப தற்கா
--தன்னுடலில் தொழுநோயைச் சிவாவும் பெற்றார்
ஏக்கத்தில் மக்கள்தாம் வாடு தற்கா
--ஏந்திகொடி குமரனுமே உயிரை விட்டார் !

வளந்தன்னை ஊழலிலே சுருட்டு தற்கா
--வாஞ்சிநாதன் ஆட்துரையைச் சுட்டுக் கொன்றார்
அளவின்றி அரசியலார் சொத்தைச் சேர்க்கவா
--அல்லலினைத் தீர்த்தகிரி சிறையில் ஏற்றார்
பளபளக்க ஆட்சியாளர் பவனி வரவா
--பட்டினியில் பாரதியார் பாடல் யாத்தார்
களவுகொள்ளை அதிகார ஆர்ப்பாட் டங்கள்
--காண்பதற்கா வெள்ளையனை ஓட வைத்தார் !

கதர்சட்டை ஒன்றுடனே முதல்வ ராகக்
--கடமையினைச் செய்திட்ட காம ராசர்
பதவிதனில் இருந்தபோதும் சொந்த வீடு
--பார்க்காத தூய்மையான அமைச்சர் கக்கன்
முதலாக வேட்டியொன்«றைத் துவைத்துக் கட்டி
--முழுத்தொண்டே தன்பணியாய் வாழ்ந்த சீவா
நிதம்மக்கள் வாழ்வுயரப் பாடு பட்டோர்
--நினைவுகளாய் ஆனதுவே நாடு மின்று !



அந்தமானில் கல்சோறு உண்டு முன்னோர்
--அரும்உயிரில் பெற்றளித்த அருமை நாட்டை
சொந்தநலன் ஒன்றிணையே கொள்கை யாக
--சேர்ந்துசிலர் அழிப்பதனைக் காண்ப தோநாம்
அந்நியனை விரட்டுதற்கே ஒன்று சேர்ந்து
--அடக்குமுறை எதிர்த்திட்ட முன்னோர் போன்று
முந்திநின்று கயவரினை வீழ்த்தி நாட்டை
--முத்தாக ஒளிரவைக்க உறுதி ஏற்போம் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (14-Aug-15, 10:04 am)
பார்வை : 846

மேலே