ஆதிப் பெற்றோர் தமிழர்களே

ஆதிப் பெற்றோர் தமிழர்களே!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி: ’தி இந்து’ சனி, ஆகஸ்ட் 22, 2015. பக்கம் 11
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையர்க்குப் பிறந்தவரென்றும், அந்த ஆதிப்பெற்றோர் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அண்மையில் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இதற்காக அவர் உலகமெலாம், சுற்றிப் பல மனித இனங்களின் மரபணுக்களைத் திரட்டி ஆராய்ந்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கும் வந்து உசிலம்பட்டியில் வசித்த விருமாண்டி என்பவருடைய மரபணுவையும் ஆராய்ந்திருக்கிறார்.
+++++++++
இந்த ஆய்வில் மனித குலம் பல இனங்களாகப் பிரிந்திருந்தாலும் அவர்களுடைய மரபணுக்கள் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் கண்டு வியந்திருக்கிறார். அந்த ஆய்வின் முடிவாகத்தான் மனித குலம் முழுவதும் ஒரே பெற்றோர்க்குப் பிறந்தவர்கள் என்று அவர் கூறினார்.
++++++++++
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மையை பைபிளும், குர்ஆனும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டன. மனித இனத்தின் ஆதிப் பெற்றோர் ஆதாம், ஏவாள் என்றும் இவ்வேதங்கள் தெரிவிக்கின்றன.
++++++++++++++++
ஆதாம், ஏவாளைப் படைத்த இறைவன் அவர்களைக் கிழக்கே இருந்த ஏதெனில் குடியமர்த்தினார் என்று பைபிள் (ஆதி.2.8) கூறுகிறது.
++++++++++++
ஆதத்தையும் ஹவ்வாவையும் (ஏவாள்) படைத்த இறைவன் ‘ஆதமே! நீரும் உம்முடைய துணைவியும் சுவனத்தில் குடியிருங்கள்’ என்று கூறியதாக குர்ஆன் (2.35) குறிப்பிடுகிறது.
+++++++++++
குர்ஆன் சுவனத்தைக் குறிக்க ‘ஜன்னத்’ என்ற சொல்லை ஆள்கிறது. அரபியில் ‘ஜன்னத்’ என்றால் ‘சொர்க்கம்’ என்றும் ‘சோலை’ என்று இரு பொருளுண்டு.
++++++++
ஆதம், ஹவ்வா சொர்க்கத்தில் வசித்ததாகப் பலர் நினைக்கின்றனர். ஆனால், இப்படிப் பொருள் பண்ணுவதற்குப் பல தடைகள் இருக்கின்றன. ஆதம், ஹவ்வா பூமியில் தான் இருந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன.
++++++++
இறைவன் குர்ஆனில், ‘நான் பூமியில் பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்’ என்று (2.30) கூறுவதே முக்கியமான சான்றாகும்.
+++++++++++
இப்னு யஹ்யா, பைழாவி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் ஆதாம், ஹவ்வா இருந்த இடம் பூமியே என்று சான்றுகள் காட்டி நிறுவியுள்ளனர்.
+++++++++
பூமியில் ஆதாம், ஏவாள் வாழ்ந்த இடம் இலங்கை என்று அலெக்ஸாந்திரியாவைச் சார்ந்த கிறித்துவக் குரு யூட்டீஷியஸ் கூறுகிறார்.
++++++++++
‘சொர்க்க’த்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதாம் குடியமர்த்தப்பட்ட இடம் ‘செரந்தீப்’ என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர். ‘செரந்தீப்’ என்பது இலங்கையைக் குறிக்கும்.
+++++++++++++
அலீ(ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் ஆதாம், ஏவாள் வாழ்ந்த இடம இந்தியா என்று கூறுகின்றனர்.
+++++++++++++++++
ஆதம் இலங்கையில் குடியமர்த்தப்பட்டபோது அது இந்தியாவுடன் இணைந்திருந்தது. அவர் குடியேறிய இடம் ஒரு மலை உச்சி. அது பழங்காலத்தில் இருந்தே ‘ஆததின் சிகரம்’ (Adam’s Peak) என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் மனிதப் பாத வடிவில் ஒரு பள்ளம் காணப்படுகிறது. இது ஆதத்தின் பாதச் சுவடு எனப்படுகிறது.
+++++++++++++
மார்க்கோபோலோ (சுமார் கி.பி. 1293) ஆதம் மலையில் ‘நமது முதல் தந்தையான ஆதத்தின் கல்லறை இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
++++++++++++
இந்த மலையின் அடிப்பகுதியில் உள்ள ஒரு குகையின் வாசலில் ’மனித குலத்தின் தந்தை’ என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது.
+++++++++++
வெளிநாட்டு வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இம்மலைச் சிகரத்தை “ஆதாமின் சிகரம்” என்றே குறிப்பிடுகின்றனர். அங்கே இருப்பது ஆதித் தந்தையின் பாதம் என்று நம்புவதாலேயே. பழங்காலத்தில் இருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து யூதர்கள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள் அதைத் தரிசிப்பதற்காகவே வந்தனர். அதை அவர்கள் புனிதப் பயணமாகக் கருதினர்.
+++++++++++++++
’அவ்வை’ என்ற தமிழ்ச் சொல்லே ஹீப்ரு மொழியில் ‘ஈவ்’ என்றும், அரபியில் ‘ஹவ்வா’ என்றும் திரிந்திருக்கிறது.
++++++++++++++
குமரி மாவட்டத்தில் மூன்று அவ்வைக் கோயில்கள் இருக்கின்றன. தோவாளை வட பகுதியில் அழகிய பாண்டியபுரத்தை அடுத்துள்ள குறத்தியறையில் ஓர் அவ்வையாரம்மன் கோயிலும், குறத்தியறையில் இருந்து தெற்கே தாழக்குடியில் ஓர் அவ்வையாரம்மன் கோயிலும், முப்பந்தலில் ஓர் அவ்வையாரம்மன் கோயிலும் அமைந்திருக்கின்றன.
++++++++++++
இக்கோயில்கள் ”அவ்வையார்” என்ற புலவருக்காக எழுப்பப்பட்ட கோயில்கள் என்றே பலரும் கருதுகின்றனர்.
+++++++++++
தமிழ் இலக்கிய வரலாற்றின்படி சங்க காலத்து அவ்வையார், ‘ஆத்திச்சூடி’ பாடிய அவ்வையார், ‘ஞானக் குறள்’ பாடிய அவ்வையார் என்று மூன்று அவ்வையார்கள் இருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.
+++++++++++
இந்த அவ்வையார்கள் மூவருக்கும் குமரி மாவட்டத்துக்கும் தொடர்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் இவர்கள் யாரும் மக்கள் கோயில் கட்டிக் கும்பிடும் அளவுக்குச் சமய முக்கியத்துவம் பெற்றவர்களாகவும் தெரியவில்லை.
++++++++++++
அப்படியென்றால் ‘இந்த அவ்வையார் யார்?’ என்று கேட்கலாம். மனித குலத்தின் ஆதித் தாய் அவ்வையே (ஏவாள்) இந்த அவ்வை. தொடக்க காலத்தில் தாயை வழிபடும் வழக்கம் இருந்தது என்பதை மனித இன வரலாறு கூறுகிறது. அவ்வையாரம்மன் கோயில்கள் அந்தத் தாய் வழிபாட்டின் தொடர்ச்சியே ஆகும். அவ்வையாரம்மன் என்ற பெயரும் இதை உறுதி செய்கிறது.
++++++++++++++
மேலும் குமரி மாவட்டத்துத் தோவாளை வட்டத்தில் ஆண்கள் அவ்வையார் பிள்ளை என்றும், பெண்கள் அவ்வையாரம்மை என்றும் பெயர் சூடும் வழக்கம் இருக்கிறது. இதுவும் அவ்வையாரம்மன் கோயில்கள் ‘அவ்வை என்ற ஆதித் தாயின் வழிபாட்டுத் தலங்களே’ என்பதை நிரூபிக்கின்றன.
+++++++++++++++
’தாய்’ என்ற பொருளில் ‘அவ்வை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை “ஈன்ற அவ்வையும் அத்தனும்” என்ற கந்த புராண வரி (தெய்வ.238) விளக்குகிறது.
++++++++++++++++
குமரி மாவட்டத்து முஸ்லிம்கள் ‘ஆதம் பாவா’ என்ற பெயரை விருப்பத்தோடு சூடிக்கொள்கின்றனர். ‘பாவா’ என்றல் ‘தந்தை’ என்று பொருள். வேறிடங்களில் ‘ஆதம் பாவா’வைக் காண்பது அரிது.
+++++++++++++++
முஸ்லிம்கள் மட்டுமின்றி. இம்மாவட்டத்துக் கிறித்தவர்களும் ‘ஆடம்’ (Adam) என்ற பெயரை வைத்துக்கொள்கின்றனர். வேறிடத்துக் கிறித்தவர்களிடம் இப்பெயர் காண்பது அரிது.
+++++++++++++++++
இவையெல்லாம் ஆதம், ஏவாள் இருவரும் குமரிக் கண்டத்தில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை மெய்ப்பிக்கின்றன.
++++++++++++++
‘அவ்வை’ என்பது தமிழ்ச் சொல் என்பதைக் கண்டோம். ’ஆதம்’ என்ற பெயரும் ‘ஆதன்’ என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே.
+++++++++++++
‘ஆதன்’ என்பது தமிழில் வழங்கிய மிகப் பழைய பெயர்களுள் ஒன்று. ஆதன், அவினி, ஆதன் அழிசி, ஆதனுங்கன், ஆரன் எழினி என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
+++++++++++++++++
தந்தையைக் குறிக்கும் ‘அத்தன்’, ‘அத்தா’ என்ற சொற்கள் ‘ஆதன்’ என்ற சொல்லில் இருந்து தோன்றியவையே.
++++++++++++++
மேலே காட்டிய கந்த புராண மேற்கோளில் (ஈன்ற அவ்வையும் அத்தனும்) ‘அத்தன்’ என்ற சொல் ‘தந்தை’ என்ற பொருளில் கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த மேற்கோளில் ‘அவ்வை, அத்தன்’ என்ற சொற்கள் ஒருங்கே கையாளப்பட்டுள்ளன. இவை ஆதாம், ஏவாளைக் குறிப்பன என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
+++++++++++++++++++
இதுவரை காட்டிய சான்றுகளில் இருந்து ஆதாம், ஏவாள் என்ற ஆதிப்பெற்றோருக்குப் பிறந்த இனம் தமிழினம் என்பதை அறியலாம்.
+++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++

இந்தக் கட்டுரையில் அச்சுப் பிழைகள் இருப்பின் அதற்கு நானே பொறுப்பு. கவிக்கோ அவர்கள் மேற்கண்டஆய்வுக் கட்டுரையில் ஆதன் என்ற பெயர் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பெயருக்கான சான்று ஒன்றையும் நான் தருகிறேன். புதுச்சேரி தாகூர் (அரசு) கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறைப் பேராசிரியர் ஒருவர் இருந்தார். பணி ஓய்வுக்குப் பின் சில ஆண்டுகள் கழித்து இயற்கை எய்திவிட்டார். அவர் பெயர் மாணிக்கம். அவரது தந்தை பெயர் ஆதன். அவர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டைக்கு அருகில் உள்ள பனங்காடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகள் இருவரும் புதுச்சேரியில் தான் இருக்கிறார்கள். ஆதன் என்ற பெயர் பற்றிய தகவல் பேராசிரியர் மாணிக்கம் அவர்கள் உயிரோடிருக்கும் போதே தெரிந்திருந்தால் அவர் தந்தையின் பெயர்க்குரிய தகவல்களைத் திரட்டியிருப்பேன்.

எழுதியவர் : கவிக்கோ அப்துல் ரகுமான் (24-Aug-15, 3:57 pm)
பார்வை : 445

மேலே