சதுப்பு நிலம்

அக்கினி ஆறுகள்
சங்கமித்த
எரிமலைச் சாகரங்கள்
இருட்டுச் சூரியனின்
குருட்டு கண்களை
மூடும் வான வயல்களில்
மின்னல் பயிர்களை
மேய்ந்து வரும்
முழக்க விலங்குகளை
முட்டிக்கையால்
மோதி உடைத்த
மூர்க்கப் புயல் கரங்கள்.
திருட்டுப் போன
உரிமைத் தீவுகளை
தீராத ஆவேசப் புயல்
கொண்டு உருட்டி
உடன் மீட்ட
உலைக் களங்கள்
அன்றொருநாள் ..........
காலச் சதியின்
கதவுகள்
திறந்து கொள்ள
ஊழித் துரோகத்தீ
உட்புகுந்து
உள்வாங்கி
உமிழ்ந்து செல்ல
சேறு மீந்திருக்கும்
சதுப்பு நிலச்
சமவெளியாய் இன்று
சலனமற்ற
சமுத்திரச்
சமாதியின் மேல்
சரித்திரம் மறந்து
சரிந்து கிடக்கின்றன

எழுதியவர் : உமை (26-Aug-15, 10:05 pm)
பார்வை : 1227

மேலே