திருமணமான ஆணும் பெண் தோழியின் நட்பும் - போட்டிக் கவிதை சொ-சாந்தி

திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும்...

மனை ஆண்ட மனையாளை
மருத்துவ மனையாண்ட நேரமது
பிணிகொண்டு படுக்கையிலே
அவள் விழிகூட திறக்கவில்லை...!!

மனைவிக்கு அருகிருந்து
செவிலிக்கும் மேலாய் சேவை
செய்திட்ட தோழியரும்
தெய்வத்தின் தூதுவர்தான்...!!

உறவெதிர்த்த திருமணத்தில்
சிறுபிள்ளையோ இரண்டு
உறவுகளோ வேரறுக்க
உதவிக்கெல்லாம் தோழியரே..!!

எத்துன்பம் நேர்ந்தாலும்
இடிந்து நான் விழுந்ததில்லை
எனைத்தாங்கும் சுமைதாங்கி
என் உயிர்த் தோழியரே..!!

விழி கண்ணீர் வடித்ததில்லை
வேதனைகள் தொடர்ந்ததில்லை
தோழியர் தொடரும் வரை
கவலைகள் எனக்கில்லை..!!

தோல்விகள் என் வாழ்வில்
தொட்ட சரித்திரமில்லை
தோழியர் அறிவுரையில்
என்குடி கெட்டதுமில்லை...!!

பணியிடத்து தோழியரும்
என் பிணிக்கான மருந்தாவர்
அன்பென்ற மருந்தினிலே
அன்றொழியும் எப்பிணியும்..!!.

தோழியரை துவேசிக்கும்
சிநேகத்தைப் பரிகசிக்கும்
சமுதாயப் பார்வை மட்டும்
எப்போதும் சகதியில்தான்...!!

வெறும் வாயில் அவல் மெல்லும்
வெட்டியான சமுதாயம்
ஒட்டி நான் செல்வதில்லை
தோழியரும் அவ்விதம்தான்...!!

உயிரும் தரும் தோழியர்கள்
பெற்றதெல்லாம் பாக்கியம்தான் - இதுபோல்
உங்களுக்கும் தோழியருண்டோ..??
கூறாதீர் கண்படுமே...!!

எழுதியவர் : சொ.சாந்தி (30-Aug-15, 8:00 pm)
பார்வை : 238

மேலே