யசோதரை

யசோதரை
-------------------
புத்தர் ஞானம் அடைந்தபின் பல ஊர்களுக்கும் சென்று வருகையில் ஒரு நாள் தனது சொந்த ஊரைக் கடந்து செல்ல வேண்டி வந்தது.நடு இரவில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்ததால் தன் மீது தனது மனைவி யசோதரை கோபமாய் இருப்பார் என்பதனை நினைவில் கொண்டு,தனது மனைவியை சந்திக்க சென்றார்.சந்தித்தபோது யசோதரை மிகுந்த கோபத்துடன்தான் இருந்தார்.அவர் புத்தரிடம் சொன்னார்,

''நீங்கள் இந்த உலகத்தைத் துறந்ததைப் பற்றி எனக்கு கோபம் இல்லை.அப்படி ஒரு விருப்பம் உங்களுக்கு இருப்பது தெரிந்திருந்தால் நான் அதற்குத் தடையாக இருந்திருக்க மாட்டேன்.ஆனால் உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை.அதுதான் எனக்கு வருத்தம்.ஒன்றும் கூறாமல் நட்ட நடு ராத்திரியில் நீங்கள் பிரிந்து சென்றது எனக்கு எவ்வளவு வேதனை அளித்தது தெரியுமா?நான் வீர குலத்துப்பெண்.தனது கணவன் போருக்கு சென்றால்,அவரை மாலை அணிவித்து வழியனுப்பும் குலத்தை சேர்ந்தவள்.அவ்வாறு அனுப்பும்போது கூட கண்ணீர் விட்டால் தனது கணவரின் வீரத்திற்கு இழுக்கு என்று எண்ணக் கூடியவள்.

நீங்கள் தைரியமாக உலகத்தைத் துறக்கப் போவதாக என்னிடம் கூறி சென்றிருந்தால் நான் பெருமை அடைந்திருப்பேன்.என்னுடைய பெருமையையும்.அமைதியையும் குலைத்து விட்டீர்கள்.நீங்கள் என்னை முழுமையாக நேசித்திருந்தால் நானும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்தி அனுப்பியிருப்பேன்.எனவே என் கோபம் உங்கள் துறவரத்துக்கல்ல,என்னிடம் சொல்லாமல் போனதற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.''

புத்தர்,''நீ சொன்னது சரிதான்.நான் அதற்காக மன்னிப்புக் கேட்கவே இப்போது வந்துள்ளேன்.என்னை மன்னித்துவிடு.முழுமையான அன்பு என்றால் என்ன என்பதை இப்போது அறிந்து இங்கு வந்திருக்கிறேன்.இவ்வளவு தாமதமாக இங்கு வந்ததற்குக் காரணம் ,உன் கோபம் படிப்படியாகக் குறைந்திருக்கும் என்ற நம்பிக்கையில் தான்.''

பின் யசோதரை தனது கணவராகிய புத்தரிடம் சிட்சை பெற்றுக் கொண்டார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (14-Sep-15, 8:49 pm)
பார்வை : 148

மேலே