எழுத்தாகா எண்ணங்கள்

அரட்டைச் சாளரங்களில்
இடையுறாது எரியும்
பச்சை விளக்குகள்
அணைந்து
பரபரப்பு ஒய்ந்த
அமைதியான
பின் இரவுகளில்
கிடைக்கும்
இடை வேளைகளில்
கடவுச்சொல்
சரிபார்த்து
உள் நுழைந்து
கவிதையா கட்டுரையா
என எண்ணுமுன்
கடுகதியாய்
கரைந்து செல்லும்
கணப்பொழுதுகள்
கண்ணுக்கு வண்ணமாய்த்
தோன்றும் எண்ணங்களில்
தொலைவதால்
எழுத்தாகா
என் எண்ணங்கள்
ஞாபகப் பையில்
மறுபடியும் வந்து
உட்கார்ந்து கொள்கின்றன
இன்னும் ஒரு நாளை நோக்கி ..

எழுதியவர் : உமை (17-Sep-15, 12:23 am)
பார்வை : 137

மேலே