ஏனென்றால் நீ வருவாயடி
![](https://eluthu.com/images/loading.gif)
உள்ளங்கை ரேகை படர்ந்து
உடல் முழுதும் வரிகள் அமைத்து
தேகம் சுருங்கி நின்றாலும்
நான் காத்திருப்பேன்
ஏனென்றால்?....
விழி இரண்டும் பார்வை இழந்து
செவி இரண்டும் கேட்க மறந்து
தோல் எங்கும் ஒட்டி போனாலும்
நான் காத்திருப்பேன்
ஏனென்றால்?...
முதுமை என்னில் மூர்ச்சையடைந்து
முகமெல்லாம் பொழிவிழந்து
இளமை இறந்து கிடந்தாலும்
நான் காத்திருப்பேன்
ஏனென்றால்?...
நடுநடுவே துடிக்கும் இதயம்
சோர்வடைந்து நின்றாலும்
தட்டி எழுப்பி
நான் காத்திருப்பேன்
ஏனென்றால்?...
இதுவே உன் கடைசி நொடி
என்ற காலபைரவனை கால்வணங்கி
என் கணக்கை மாற்றி
நான் காத்திருப்பேன்
ஏனென்றால்?....
நாம் இணைந்த நாட்கள் தொடங்கி
ஈறைம்பது ஆண்டுகள் நெருங்க
இணைந்த நாளில் பிரிந்து சென்றவளே
வருவாயடி...
என் கண்ணீர் துடைக்க கல்லறை விடுத்து
வருவாயடி...
என் கை சேரவே
வருவாயடி...
நான் காத்திருப்பேன்
உனை சேரவே!....
நான் காத்திருப்பேன்
உனக்காகவே!.....
வருவாயடி.....