என் குழந்தைக்குப் பால் யார் கொடுப்பது

"சண்டாளன்.. எங்கொழந்தைக்குப் பால் கூட குடுக்க முடியாமப் பண்ணிட்டானே!" புலம்பிய நாச்சாத்தாளுக்கு ஸ்பென்சர் பிளாசாவில் நாம் பார்த்துப் பெருமூச்சு விடும் ஜீன்ஸ் அம்மையர்கள் வயது தான் இருக்கும்.

ஜாதகம் பார்த்து, பத்தில் ஒன்பது பொருத்தம் கிட்டிய பின்னர் தான் இவளது திருமணம் நிச்சயிக்கப் பட்டது. ஒன்றரை வருட மணவாழ்க்கை. கைக்குழந்தையோடு, கணவனைப் பிரிந்து இப்போது தாய் வீட்டில். காரணம் இவளுக்கு எயிட்ஸ்.

போன வாரம் தான் கோயம்புத்தூர் சென்று பல விதப் சோதனைகளுக்குப் பின், தன் ஆசை மகனுக்கு அதே வியாதி இல்லை என்பதை நிச்சயம் செய்தாள். அதைக் கேட்ட அவள் அப்பனும், ஆத்தாளும், மாமியாரும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குழந்தைக்குப் பால் கொடுத்தால் அவனுக்கும் வைரஸ் தொற்றிவிடும் என்பதாக டாக்டர் சொன்னதால், தாய்மையைப் புதைத்து பால் சுரப்பதையே மறக்கிறாள். கண்ணீர் சுரப்பது கட்டுப் படுத்த இயலவில்லை என்பது வேறு கதை.

பால்வினைப் பரவல் நோய் கொள்ளும் அளவிற்கு நாச்சி ஒழுக்கம் கெட்டவளில்லை. பின் எப்படி?

மணமான புதிதில் நன்றாகத்தான் இருந்தான் அவளது ஆடவன் சுப்பிரமணி; திடகாத்திரமாக லேசான இளந்தொந்தியுடன். போகப் போக சோர்ந்து போனான். அடிக்கடி காய்ச்சல் வரும்; வந்தால் போகாது. மாத்திரை, ஊசி, ஹார்லிக்ஸ், ஆப்பிள்.. எதுவும் உதவவில்லை.

பொள்ளாச்சி சிவபாலன் டாக்டர் தான் HIV டெஸ்ட் எடுத்துப் பார்க்கும் யோசனை சொன்னார். ரிசல்ட் பாசிட்டிவ். அண்ணா சாவுக்குக் காத்திருந்த கருணாநிதி போல, எம்.ஜி.ஆர். சாவுக்குக் காத்திருந்த ஜெயலலிதா போல, காய்ச்சல் வரும் வரை HIV வைரஸ் காத்திருந்ததாம். அவனுக்குள் 2 வருடமாகவே குடியிருந்திருக்குகிறது எயிட்ஸ்.

சில மாத தாம்பத்திய உறவில் நாச்சிக்கும் இது பரவியிருந்தது. துரதிஸ்டவசமாக, பொள்ளாச்சியில் இருவருக்கும் நோய் அடையாளம் கண்டறியப்பட்ட கணத்தில் அவள் கருவுற்றிருந்தாள். தாயின் கருவிலேயே பிள்ளைக்கும் தொப்புள் கொடி மூலம் நோய் ஊட்டப்படும் என்ற கொடுமையையும் தாண்டி நாச்சியின் தாய்மை உணர்ச்சி உந்தியதால் பிள்ளை பெற்றெடுக்கப் பட்டான்.

புருஷன் சுப்பிரமணி பற்றி இப்போது சொல்லியாக வேண்டும். பத்தாவது பெயிலானதால், 17 வயதில் கேரளாவிற்குக் கந்துக் கடை நடத்தச் சென்றவன். சில சந்தர்ப்பங்களில் வட்டியும், முதலும் திருப்பிச் செலுத்த முடியாத சேச்சிமார் வேறு வகைகளில் கடனைக் கழிக்க இசைந்த போது சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனவன். முப்பதைத் தொட்டும் முதல் முத்தம் கூட அனுபவித்திராத முதிர் காளையர் வாழும் உலகில், இருபது வயதை நெருங்கும் முன்னரே மணியனுக்கு ஜாக்பாட். அப்படியே கொஞ்ச ஆண்டுகள் விளையாடிதில் விளைந்த வினை தான் இது.

எட்டாவது வரை மட்டுமே படித்தவள் நாச்சி. ஆனாலும் உலக ஞானம் மிகுதி அவளுக்கு. ஏதொரு பாவமும் புரியாத தனக்கு உயிர்கொள்ளி நோய் தந்த கணவன் மீது கடுஞ்சினம். இருக்காதா பின்னே? இருந்தாலும் சொந்தக்காரனுக எல்லாம் பொழுதினிக்கும் அவனத் தூத்தறது அவளுக்குப் புடிக்கல. அவனும் மனிதன் தான்; சகல மனிதராலும் ஒதுக்கப் பட்டு நாதியில்லாமல் கிடக்கிறான் இன்று. நேஞ்சோரம் மணியனுக்கான கரிசனம் அவ்வப்போது தலைதூக்கும். இருவரும் சேர்ந்து வாழ்ந்த குறுகிய காலத்தில் அன்பான, கிளர்ச்சியான, பொறுப்பான கணவனாகத் தான் இருந்திருக்கிறான். எதையும் மறைத்ததில்லை; மனதளவில் காயப்படுத்தியதும் இல்லை. அதனாலேயே, தன் மருமகனை இடைவிடாது சாடிக்கொண்டிருந்த தாய், தகப்பன் மீது கோபத்தைத் திருப்பவும் செய்வாள்.

"ஜாதகம் பாக்க ஊர் ஊரா அலஞ்சீங்களே? ஒரு தடவையாவது மெடிக்கல் செக்கப் ரிப்போர்ட் கேட்டிருப்பீங்களா?" வாயில்லாப் பூச்சியென நினத்த மகள் இப்படிக் கேட்டதில் சோகம் கலந்த அதிர்ச்சி அப்பனுக்கும் ஆத்தாளூக்கும்.

"நம்ம சாதி சனத்துல யார் கண்ணு அதெல்லாம் பண்றாங்க? ஏஞ்சாமி, நாங்க என்ன உன்னைய வேணும்னா இப்படிக் கெணத்துல புடிச்சு தள்ளுவோம்?" நிஜம் தான்.

பால்வினை நோய்கள் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படுவதுடன், இனவிருத்தி செய்யும் தகுதியையும் உறுதிப் படுத்திக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக அல்லவா இது மதிக்கப்பட வேண்டும்? தொழில் நுட்பம், கல்வி எல்லாவற்றிலும் முன்னேறிய நகரத்து இளைஞன் ஒருவன் மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழை எடுத்துப் போய் பெண்ணின் தகப்பனிடன் நீட்டுவானால், இந்தப் பிறவியில் அவன் பிரமச்சாரியாகவே இருக்க நேரிடும். கிராமத்தில் கேட்க வேண்டுமா?

தோட்டத்து வீட்டில் ஹேங்கரில் மாட்டிய சட்டை கட்டிலில் படுக்கப் போட்டது போலக் கிடந்தான் மணியன். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தானே முன் வந்து அவனைச் சந்திக்கிறாள் நாச்சி. தான் (தாங்கள்) உயிர்வாழப் போகும் குறுகிய காலத்தில் ஏதாவது சமுதாயத்திற்குச் செய்தாக வேண்டுமெனத் தீர்மானிக்கிறாள்.

இரண்டாம் தினம் தொகுதி எம்.எல்.ஏ, நான்காம் நாள் மாவட்ட ஆட்சியாளர்.. நீள்கிறது அவள் சந்திப்பு. ஒவ்வொருவரிடத்தும் தரப் படுகிறது மனு. அதன் சாரம் கீழே.

ஜாதகப் பொருத்தம் பார்க்கப் படுகிறதோ இல்லையோ, உடல் பரிசோதனைச் சான்றிதழின் அடிப்படையில் பெற்றோர் முடிவெடுக்கத் தேவையான விழிப்புணர்வை ஊடகங்கள் உண்டாக்க வேண்டும்.
திருமணப் பதிவு மையங்கள் அத்தகைய சான்றிதழ் இல்லாத மணகக்களின் திருமணத்தை அங்கீகரித்துப் பதிவு செய்யக் கூடாது.
அவ்வாறு செய்யாதவர்களின் திருமணத்தை நடத்த இடமளிக்கும் கல்யாணச் சத்திரங்கள் மீது நிபந்தனையற்ற அபராதம் விதிக்க வேண்டும்.


இவை போக வேறு சில வேண்டுதல்களும் அதில் அங்கம் பெற்றன.

எயிட்ஸ் கட்டுப் பாட்டு வாரியம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமைக் கழகம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் என, சாகும் வரை தான் சந்திக்கப் போகும் நபர்கள்/அமைப்புகளின் பட்டியல் நாச்சாத்தாளிம் இருக்கிறது.

உதிரும் போது மாமணம் வீசும் மலர் இவள். வழிபாட்டுப் பொருள்; பூஜிக்கப் பட வேண்டியவள். மலைக்கப் செய்கிறாள்.

அந்த அளவுக்கு இல்லாட்டியும், நாம எதாவது செய்ய முடியுமானு யோசிக்கலாம். அட் லீஸ்ட் நமக்கு நாமே எயிட்ஸ் பரிசோதனை செஞ்சுக்கலாம். இதுல வெக்கப் பட ஒன்னும் இல்ல. ஆஸ்பத்திரில ஊசி போடும் போது, சலூன்ல சவரம் பண்ணும் போது எப்படி வேணாலும் HIV வரலாம். எந்தப் புத்துல எந்தப் பாம்போ?

எழுதியவர் : செல்வமணி - இணையம் - குப்புச (26-Sep-15, 8:07 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 165

மேலே