பாவிநானும் பதுங்கிமெல்ல பாவையெண்ணம் மயங்க அள்ள

சிரித்துச் சிதறடிக்கிறாய்
சிந்தனை மழுக்கி
சிறுவனாய் எனை மாற்றி.....

உடை விலக்காமலே
உடைக்கிறாய் மனம்
உதட்டுச் சுழிப்பாலே ....

முன்பின் இல்லை
முகம்கூட காட்டாமலே
முல்லையுன் பாரியாக்குகிறாய்.....

காந்தக்கண் சிமிட்டி
கள்வன் என்னை
கட்டி இழுக்கிறாய்....

உலக அழகிகளும்
உற்றுப் பார்க்க
உயர்ந்து நிற்கிறாய்.....

நவீன உடை நங்கைகளை
நளினத் தாவணியுடுத்தி
நாணம் கொள்ள வைக்கிறாய்....

பெற்ற அன்னையும்
பிடிவாதமாய் உன்அழகில்
பித்தங் கொள்ள வைக்கிறாய்..

கன்னியுன் உடல்
கணநேரம்தழுவ கதிரவனையும்
கலங்க வைக்கிறாய்...

தேவதையுன் வீதியில்
சேவகனாகித் தினம்
பாதங்கள் தேட வைக்கிறாய்.....

படித்துறையில் பதித்து
பளிங்குப் பாதங்களால்
பாவம் போக்குகிறாய்.....

பதம்காட்டி விடு
பாவவிமோசனம் பெற்ற
படித்துறை மண்ணே....

பாவிநானும் பதுங்கிமெல்ல
பாவையெண்ணம் மயங்க அள்ள...

எழுதியவர் : க.நஞ்சப்பன் (6-Oct-15, 8:16 pm)
பார்வை : 82

மேலே