நம்மால் முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும்

நான் படித்த கதை - தன்னம்பிக்கையைத் தூண்டும் கதை!!

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தின் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்துஅமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்டு " ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றார் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா! நான் யார் தெரியுமா ?" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வந்தரின் பெயரைச் சொன்னார்.

அசந்து போனார் இவர்.

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்துக் கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாகக் கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒரு வருடம் கழித்து இந்த பணத்தை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு, செக்கை இவர் கைகளில் திணித்து விட்டுச் சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்குச் சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்துப் பத்திரமாகப் பூட்டினார். பின் தனது உதவியாளரை அழைத்து அனைத்து ஊழியர்களையும் நிர்வாகக் கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யச் சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

நிறுவனத்தின் தலைவர் பேசஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் எதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதைக் களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார். பின்னர் வேலைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுக் களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு, மூச்சு, செயல் , சிந்தனை, தூக்கம் அனைத்தும் அவருடைய தொழிலைப் பற்றியே இருந்தது. மிக சரியாக ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியாக 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம்.

அடுத்த நாள் விடியற் காலை அந்த செல்வந்தர் கொடுத்த 500கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நேரம். ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவரைக் கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்துப் பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார். அந்த செல்வந்தரைக் காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்.

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?"என்றார்.

அந்த பெண்மணி " இல்லை அய்யா! அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர். செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையெழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மைக் காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

அன்பு நண்பர்களே! ற்

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு" என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்.

இப்படிக்கு,
உங்கள் நண்பன் ***✔

எழுதியவர் : முனைவர் வெ.வசந்தா. (8-Oct-15, 3:30 pm)
சேர்த்தது : vasantham52
பார்வை : 321

மேலே