உன் நினைவுகள்
---------------------------------------------------------------------------------------------------------
ஆத்மாநாம் கவிஞர் வாழ்காலம்: (18-01-1951 - 06-07-1984)
_______________________________________________________________
நேர்த்தியான படைப்பாளரின் கவிதைகள்
நம் ரசனைக்கும் கவி வளத்திற்கும் சான்றாக உங்கள் பார்வைக்காக
இங்கே பதியப்படுகிறது.
_______________________________________________________________
எனினும் நான்
உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக் கற்கள்
சிதறும் ஒளிக் கற்றைகளை
வீசும் விளக்கை
அப்பொழுதேனும்
துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள
முடியாது
இவ்விதம்தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின்
பரிமாணங்களைச் செதுக்கிய
ஓவியத்திற்குச் செல்வேன்
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்
உதிர முடியாத
காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும்
மெல்லிய ஒலியுடன்
நாடி நரம்புகளைத்
தொற்றிக் கொண்டு
சிறிது நேரம்
மூச்சளிக்கும் இசை
எழுத்துக் கூட்டங்களுக்கும்
தொடர்வேன்
ஏதேனும் ஒரு மூலையில்
உன் நினைவுகள்
என் அறையில்
நான் முடங்கிக் கிடக்கையில்
எப்பொழுதேனும்
அந்த உயிரிழந்த பஸ்ஸரை
அழுத்திச் சென்றுவிட்டாயோ
என்று மன மதிரும்
பின்னர்
உயிர்த்திருக்கும்
புட்களுடன்
தேடிக்கொண்டிருப்பேன்
அலையும் நினைவுகளில்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி: ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு பதிப்பகம் 2002)