ஆதி மொழி
நம் தமிழ் நிலைதன்னைப் பாடுகையில்- என்
இருவிழி இமைகளும் நீர் பூக்கும்
தேன் தமிழ் மொழி இங்கு தேய்கையிலே-என்
ஒற்றை இதயம் வேர் கருகும்
முச்சங்கம் வளர்த்த மன்னர்களை-நம்
புத்தக வார்த்தையில் மூழ்கடித்தோம்.
முறையாய் தமிழைப் பயிலாது-நம்
பித்தக வார்த்தையில் பாழடித்தோம்
எழுத்துப் பிழைகளை தவிர்த்திடுவோம்-பின்
கருத்துப் பிழைகளை யோசிப்போம்.
தாய்மொழி நமக்கு வீடென்போம்-பின்
சேய்மொழி வாய்வர வழிவகுப்போம்
தாய்மொழி நமக்கு உயிரென்போம்-காணும்
பிற மொழி நமக்கு உறவென்போம்
தமிழ்மொழி என்றும் தேனென்போம்-காணும்
அற மொழி இதுவே ஆதியென்போம்