யாரை விடுவேன் தூது

முள்ளை தூங்கவைத்து
பூக்களை திருடும்
நீதான் என் தோட்டக்காரன்
உனது கைகளால் நீர் ஊற்றி
நீயே அறுவடை செய்தாய்
காதலின் மீதான
என் நம்பிக்கை
உன் கண்களில்
இருந்தே துவங்கியது
காலம் செய்த
வெற்றிடங்களை
காதல் உன் நினைவுகளால்
நிரப்பியது
இன்றைக்கொடுத்து
நேற்றென சொல்லவைத்தாய்
நாளையும் கொடுப்பாய்
இன்றையை நேற்றாக்க
நேசங்களை புகுத்தி
தேசங்கள் கடந்தவனே
ஒன்று மட்டும்
சொல்கிறேன் கேள்
நீ வந்தால்
காம்பில் கனமாகி இருப்பேன்
வாராது போனால்
கல்லறையில்
பிணமாகியிருப்பேன்.