எதிர்காலம் எப்படியோ

எதிர்காலம் எப்படியோ !

ஒரு கொத்து
பசும் நாற்றினை
ஓரிடத்தில் வைத்ததுபோல்
சிறுகூண்டு வீட்டிற்குள்
மிளகாய் மூக்குடன்
அழகாய் ஒரு கிளி !

கண்ணை மூடியபடி
என்ன வேண்டுதல்
சிறைக்குள்ளே சிறுதவமா ?

கட்டுச் சீட்டில்
கடவுள் படத்துடன்
எதிர் காலமே
உள்ளதெனும்
கட்டுக்கதையை நம்பி
எல்லோரும்
இங்கு வரவேண்டும் !

இடுகின்ற
சில நெல்லுக்கே
இத்தனை விசுவாசமா ?

அதெல்லாம்
ஒன்றுமில்லை
அதிலொரு தன்னலம்
சிறைக் கம்பிகளுக்கு
வெளியேதான்
சுதந்திரக் காற்று
சுகமாய் கிடைக்கிறது !

அதுசரி
சீட்டெடுத்துத்
தரும்போது நீ
சிரிப்பது போல்
உள்ளதே ?

எதிர் காலம்
எப்படியென
என்னிடம் வருவோரை
எண்ணித்தான் !
- ருக்மணி

எழுதியவர் : கவிஞர் ருக்மணி (28-Oct-15, 10:12 pm)
சேர்த்தது : கவிஞர் ருக்மணி
பார்வை : 195

மேலே