காப்புரிமை

காப்புரிமை
-----------------
காப்புரிமைசிறுகதை

- உஷா தீபன்

அப்படி ஒரே பேச்சில் தங்கத்தை வேலையைவிட்டு நிறுத்திவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. பட்டென்று சொல்லி முடித்துக் கொண்டாள்.

அதற்கு அவள் தேர்ந்தெடுத்துக் கொண்ட இடம் குளியலறை. உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டு ஏதாவதொரு பாதுகாப்பில் முகத்துக்கு முகம் பார்க்க வேண்டாம். என்ன உணர்ச்சி ஓடுகிறதென்று தேட வேண்டாம். பிறகு அதனால் மனக் கஷ்டமும் படவேண்டாம். தன் முகத்தில் என்ன பாவம் தெறிக்கிறது என்பதும் எதிராளிக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் பகையுணர்வு என்று ஒன்று உருவாக இடமில்லை.

தப்பித்தல். ஒரு வகையில் அதுதான். அதுநாள் வரையிலான பழக்கத்திலிருந்து அதன் நெருக்கத்திலிருந்து அந்த அந்நியோன்யத்திலிருந்து பரஸ்பர நேயத்திலிருந்து. இப்படி எல்லாவற்றிலும் இருந்தும்தான். ஆனாலும் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு.

இத்தோடு, இன்றோடு நறுக்கிவிட வேண்டும் என்ற வெறி. அதில் ஏதோ வெற்றி தொற்றிக் கொண்டு இருக்கிறது.

“”என்னை மீறியா ஆடற…வாலை ஒட்ட நறுக்கிடுவேன்…ஜாக்கிரதை” “”என் வீட்டுல நுழைஞ்சு என்னையே மிஞ்சப் பாக்குறியா?” கடைசியில் நினைத்ததை முடித்தே விட்டாள் அருணா.

அதுநாள் வரையிலான மனப் போராட்டங்கள் ஓய்ந்தன. ஓய்ந்ததா அல்லது இனிமேல்தான் ஆரம்பமாகப் போகிறதா? இத்தனை வருடங்கள் அந்த வீட்டில் ஒன்றோடு ஒன்றாய் இருந்த ஒருவரை அப்படிச் சுலபமாகத் தூக்கி எறிந்தது மனதை விட்டு அத்தனை சுலபமாய்ப் போய்விடுமா என்ன? சாத்தியமில்லையே? வெளியில் வேண்டுமானால், ஒண்ணுமில்லையே என்பதுபோல் இருக்கலாம். காட்டிக் கொள்ளலாம். உள் மனதுக்குள்? “”சொல்லிட்டியா? எப்டி?” இன்னும் வியப்பும் அதிர்ச்சியும் நீங்கவில்லை இவனுக்கு.

“”அதெல்லாம் எதுக்கு? சொல்லியாச்சு…அவ்வளவுதான்…” “”அடேயப்பா, எப்டித்தான் உனக்கு வாய் வந்ததோ…எத்தனை வருஷமா இருக்காங்க…இப்படி ஒரே வார்த்தைல சொல்லிட்டேங்கிறியே?” “”அந்த நிலைமைக்குத் தள்ளுனவங்க அவுங்கதானே? அவங்கவுங்க செயல்தான் அவங்களோட எதிர்காலத்தைத் தீர்மானிக்குது. அது என் மூலமா நடந்திருக்கு. அவ்வளவுதான்” கொஞ்சமும் இரக்கமில்லாமல் கடுமையாகச் சொன்னாள்.

“”பாவம் அருணா…திடீர்னு வேலையவிட்டு நீக்கிட்டியே…பாவம்” “”அவ நடந்துக்கிற முறையே சரியில்லே. அதான் சொன்னேன்” “”நாலு குழந்தைக்குத் தாயார்டி அவ. வீட்ல அம்மா, அப்பா, மாமனார், மாமியார், புருஷன் குழந்தைகள்னு இருக்கிறவ. பெரிய சம்சாரி…” “”சம்சாரியோ, கிம்சாரியோ எப்படியிருந்தா எனக்கென்ன…எனக்குப் பிடிக்கல…அவ்வளவுதான்” இதற்கு உங்களைக் கேட்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்கிறாள்.

நிறுத்துவதற்கு என்னைக் கேட்க வேண்டாம். ஆனால் பதிலுக்கு நாளைக்கே வேறு ஆள் தேடியாக வேண்டுமே? அதற்கு என்னைத்தானே கேட்டாக வேண்டும்? என்னிடம்தானே சொல்லியாக வேண்டும். அதற்கு ஒங்க அப்பனா வந்து சேருவான்? மனதுக்குள் கேட்டுக் கொண்டான்.

“”என்ன இருந்தாலும்…இவ்ள நாள் வேலை செஞ்சவ…கொஞ்சம் மனிதநேயத்தோட நீ…” வார்த்தைகளை முடிக்கவில்லை. வெடித்தாள் அருணா. “”ஆமா…பெரிய மனித நேயம்? எல்லாம் உங்களுக்கு மட்டும்தான் இருக்கு. ஒட்டு மொத்தக் குத்தகை. ஹோல் சேல் ஏஜென்ட். உலகத்துல மத்தவங்களுக்கு எல்லாம் கிடையாது. இந்த மனித நேயத்தை நீங்களே வச்சுக்கிட்டு அழுங்க”

“”என்ன அருணா இப்படிப் பேசற?” “”பின்ன எப்படிப் பேசுறது? வேலைகள்ல வேலை வாங்குறது, கண்டிப்பா இருக்கிறவங்கள்லாம் மனித நேயம் இல்லாதவங்கன்னு அர்த்தமா? உங்களுக்கு மட்டும்தான் அதை எழுதி வச்சிருக்கா? யார் யார் தங்களோட ட்யூட்டில சரியா இருக்காங்களோ அவுங்களுக்கும் இரக்கம், கருணை, அன்பு இதெல்லாம் உண்டுதான். நல்ல குணங்கள் எல்லாமும் உங்களுக்கு மட்டும்தான் வரிச்சிருக்கா? இதெல்லாத்தையும் உள்ளடக்கியதுதான் நீங்க பெருமையடிச்சுக்கிற மனித நேயம். எங்களுக்கும் தெரியும். அதுக்காக மனித நேயம், மனித நேயம்னுட்டு இரக்கப்பட்டுக்கிட்டே இருந்தா போதுமா? வேலை நடக்குமா? அது வேறே. இது வேறே. நிர்வாகம்கிறது என்ன? எவனொருத்தன் தன் வேலைகளை, கடமைகளை, ஒழுங்கா, ஒழுக்கமா, தவறாமச் செய்து முடிக்கிறானோ, அவனுக்கு எல்லா உரிமைகளும் தானே கிடைக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. அதைத் தெரிஞ்சிக்குங்க.

இவள் என்ன சொல்கிறாள்? அப்படியானால் தங்கம் தன் வேலைகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்கிறாளா? கடமை தவறிவிட்டாள் என்கிறாளா? வெறும் மாதம் முந்நூறு ரூபாய்க்கு எவ்வளவு கடமையைச் செய்வது? ஏற்றுக் கொண்டால் மாங்கு மாங்கென்று செய்துதான் ஆக வேண்டும் என்பதுதான் சித்தாந்தமோ? வெறுமனே வேலைகளைச் செய்பவளாக மட்டுமா அவள் இருந்திருக்கிறாள்? சிறு வயதிலிருந்து இவள் குழந்தைக்கு ஒரு செவிலித்தாய் போலவும் இருந்தல்லவா கழித்திருக்கிறாள்? நம்பி சாவியைக் கொடுத்துவிட்டுப் போன காலங்கள் எத்தனை? ரெண்டு பேரும் அலுவலகம் போய்விட்ட வேளைகளில், தூசி அகற்றி, பெருக்கி, பள்ளி சென்று பையனைக் கூட்டிவந்து, அவனுக்கு உணவு கொடுத்து, பாடம் எழுத வைத்து, படிக்க வைத்து, அவனை உறங்க வைத்து, மாலை ஆபிஸ் விட்டு வருவதற்குள் மீண்டும் தயார்ப்படுத்தி ட்யூஷன் அழைத்துச் சென்று, மீண்டும் கொண்டு வந்து விட்டுவிட்டு, பிறகுதானே அவள் வீட்டிற்குச் செல்வாள்? இவையெல்லாம் எத்தனை பொறுப்புணர்ச்சிக்கான அடையாளங்கள்? ஈடுபாடு, சகிப்புத்தன்மை, அன்பு, பாசம் ஆகியவற்றிற்கு உட்பட்ட விஷயமில்லையா? இவையெல்லாமும் நிமிஷத்தில் ஒதுக்கப்பட வேண்டியவையா? தான் நினைக்கும் இந்த ஒழுக்கம், கட்டுப்பாடு இவையெல்லாம் தனக்கு மட்டும் சொந்தம் என்று இவள் நினைக்கிறளா?

பொதுவாகவே இம்மாதிரிப் பேசுபவர்களெல்லாம் அப்படித்தானே தங்களை நினைத்துக் கொண்டு நடந்து கொள்கிறார்கள்? தன்னின் பலவீனங்களை அறியாதவர்களாகத்தானே இருக்கிறார்கள்? மற்றவர்களைச் சொல்லும் இவள், தன்னையறியாமல் அந்த மாய வலைக்குள் விழுந்துவிட்டாளோ? என்னதான் யோசித்தாலும், பேசினாலும், வாதம் செய்தாலும், தங்கத்தை வேலையை விட்டு நீக்கியது சரி என்று தோன்றவில்லை இவனுக்கு.

வீட்டில் பருப்பு, எண்ணெய் என்று வைத்திருந்த பொருட்களின் அளவு குறைகிறது என்றாள். அவளா எடுத்திருப்பாள்? அவள் முகம் எடுக்கும் முகமாகத் தெரியவில்லை. “”எங்கிட்டக் கேட்டா கொடுக்க மாட்டேனா? இப்படியா சொல்லாம எடுப்பாங்க?” அருணா புலம்பியபோதும் இவன் நம்பவில்லை. பளிச்சென்று நேரில் கேட்டுவிட வேண்டியதுதானே? அதற்காக அவள் மீதான தவறுகள் நிறையச் சேர்ந்துவிட்டன போல் இப்படியா சட்டென்று நிறுத்துவது? தவறுகள் குற்றங்கள் அல்லவே? தன் வேலையுண்டு, தானுண்டு என்று போய் வந்து கொண்டிருந்தவளுக்கு இந்நிலை ஏன் வந்தது?

ஒரு வீட்டின் வருவாய் குறைந்தாலும், அவள் பாடு திண்டாட்டம்தானே? எப்படிச் சமாளிக்கப் போகிறாள்? இதெல்லாம் அருணாவுக்குத் தோன்றவில்லையா? ”

“அவுங்களோட சொந்தப் பாடெல்லாம் நினைச்சு நாம வருத்தப்பட முடியுமா? நமக்கே ஆயிரம் பாடு பாடாப் படுத்திட்டிருக்கு” சட்டென்று தும்மல் வந்தது ஒருநாள் இவனுக்கு. நச்சு நச்சென்று தும்மல் போட்டுக் கொண்டிருந்த நாளில்தான் தங்கம் சொன்னாள். “”இம்புட்டுத் தூசியோட இந்த ரூம்ல இருந்தீங்கன்னா ஏன் தும்மல் வராது? சித்த இப்படி வாங்க. சுத்தம் பண்ணிடுறேன்.” அன்று எவ்வளவு கஷ்டப்பட்டு அவனுடைய அறையைச் சுத்தம் பண்ணிக் கொடுத்தாள்.

ஒருவேளை அந்த மாதிரி செய்கையெல்லாம் இவளுக்குப் பிடிக்காமல் போய்விட்டதோ? அதில் ஏதேனும் வித்தியாசமாய் உணர்ந்து கொண்டாளோ? கேட்காமலே பலவற்றைத் தூக்கிக் கொடுக்கும் பழக்கம் உள்ள அருணா எப்படி அவளைச் சட்டென்று வேலையை விட்டு நீக்கினாள். இவன் மனது இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டுதான் இருந்தது.

அப்படி எதிர்பாராமல் தூக்கிக் கொடுப்பதையும், வந்தவரைக்கும் லாபம் என்று நினைத்து வாங்க மறுப்பவள்தானே தங்கம்? என்ன ஒரு கெளரவம் மிக்க பெண் அவள்? பையனின் பிறந்த நாளை ஞாபகம் வைத்துக்கொண்டு, அவனுக்கு மிகவும் பொருத்தமான வண்ணத்தில் விலையுயர்ந்த ஒரு சட்டையை வாங்கி வந்து நின்றாளே? அது யார் சொல்லிச் செய்தது? அந்த மனசுதானே செய்யச் சொன்னது? பின் ஏன் இவையெல்லாம் நடந்தது? இந்த வலைப் பின்னல் ஏன் சிடுக்காகியது? மனச்சுமையோடு தன் அறையிலிருந்து வெளியே வந்த இவன் உள்ளே எட்டிப் பார்த்தான்.

சுற்றிலும் அம்பாரமாய்ப் பற்றுப் பாத்திரங்களைப் பரப்பிக் கொண்டு, வழக்கத்திற்கு மாறாய் முட்டங்கால் வரை புடவையை வழித்துவிட்டுக் கொண்டு உட்கார்ந்து, சன்னதம் வந்தவள் போல் பாத்திரங்களைத் துலக்குவதில் வெகு தீவிரமாய் ஈடுபட்டிருந்தாள் அருணா.

மனதில் உள்ள ஆத்திரமும், கோபமும், விரல்களில் அழுந்தி, கரகரத்துக் கொண்டிருந்தன. “”அடேங்கப்பா….எவ்வளவு பாத்திரம் அருணா? மலையாயிருக்கே?” இவன் பிரமித்தான்.

கழுவி வைத்த பாத்திரங்களை உள்ளே எடுத்து அடுக்க ஆரம்பித்தான்.

“”யாரும் எனக்கு உதவி செய்யத் தேவையில்ல. எனக்கே பண்ணிக்கத் தெரியும்” ஒரு சிறு குழந்தையின் கோப நோக்கில் அவளைப் பரிதாபத்தோடு பார்த்தான் இவன். “”அதென்ன பார்வை? கேட் திறக்கிற சத்தம் கேட்டவுடனேயே போய் எட்டிப் பார்க்கிறது? வேலைக்காரிதான் இந்த டயத்துக்கு வருவாள்னு தெரியும்ல…எனக்கு நினைக்கிறபோது பத்திக்கிட்டு வருது.

எவ்வளவு அசிங்கமான மனுஷன் நீங்க? இதெல்லாம் தேய்ச்சுக் கழுவிச் சுத்தமாக்கிடலாம். வெளுத்தும் போயிடும். வெள்ளையாயிடும். ஆனா மனுஷா மனசு? அதை யார் வெளுக்கிறது? யார் சுத்தமாக்குறது? அதில படிஞ்சிருக்கிற கறையை எப்படிப் போக்குறது?” சத்தமாய், அழுத்தமாய், வீரியமாய் வந்த வார்த்தைகளை ஆக்ரோஷமாய் உமிழ்ந்துவிட்டு, ஓவென்று குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள் அருணா.

குற்ற உணர்ச்சி பெரும் இருளாய் இவனை அழுத்த, அழும் அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் வார்த்தைகளின்றி உறைந்து நின்றான் இவன்.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (2-Nov-15, 2:48 am)
Tanglish : kappurimai
பார்வை : 88

மேலே