அரும்புகள்

என் மகள் பூமியை
புதிதாய்ப் பார்க்கிறாள்
அவள் காணும் பூமியில்
மனிதர்களைத் தவிர
அனைத்தும் பேசுகின்றன
அவள் ஒவ்வொரு காலடி
எடுத்து வைக்கும் போதும்
மோதும் தென்றலை
இதமாய் அனுபவிக்கிறாள்
கண்களை வசீகரிக்கும் எதையும்
அவள் கேட்பதில்லை
அவள் கேட்பதெல்லாம் வானத்து
நட்சத்திரங்களைத்தான்
நிலவைச் சுட்டிக் காட்டி
அவள் ஏதோ
பேச முயற்சித்தாள்
பசிக்கிறது போலிருக்கு என்று
அன்னை எடுத்துவிட்டாள்
அவள் எழுந்து நடக்கத்
தொடங்கிய போது
பொம்மைகளைத் தேடிப்
போனாள்
அவள் இருப்பை
தொந்தரவாகக் கருதிய நாங்கள்
அவளை ப்ளே ஸ்கூலில்
சேர்த்துவிட்டோம்
அன்று நான் பார்த்துவிட்டேன்
பழுதடைந்த செல்ஃபோனில்
அவள் கடவுளுடன்
பேசிக் கொண்டிருந்ததை.